Published : 20 Sep 2018 12:40 PM
Last Updated : 20 Sep 2018 12:40 PM

பிபிஎப், சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு

வருங்கால வைப்பு நிதி, தபால் நிலைய சேமிப்பு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தபால் நிலைய சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பிபிஎப் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களும் இனிமேல் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதன்படி, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கு சற்று உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேசமயம், வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான அடிப்படை வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x