Published : 18 Sep 2018 06:39 PM
Last Updated : 18 Sep 2018 06:39 PM

2 நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.72 லட்சம் கோடி நஷ்டம்: பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி

இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால், முதலீட்டாளர்களுக்கு 2.72 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினைக் கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின் தேக்க நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்ளகாக மீண்டும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 295 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 37,290 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 98.85 புள்ளிகள் சரிந்து, 11,278 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டாலர் மதிப்பு உயர்வால், முதலீட்டு நிறுவனங்கள் பலவும் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகஅளவில் சரிவைச் சந்தித்தது. அடுத்தடுத்து இரண்டு நாட்கள் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டதால் முதலீட்டாளர்களுக்கு 2.72 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x