Published : 11 Sep 2018 05:47 PM
Last Updated : 11 Sep 2018 05:47 PM
இந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக இன்றும் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 72.64 ஆக வீழ்ச்சியடைந்தது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இரண்டு நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 509 புள்ளிகள் குறைந்து கடும் வீழ்ச்சி அடைந்தது. 37,413 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 150 புள்ளிகள் சரிவுடன் 11,287 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 976 புள்ளிகள் சரிந்தன. இதனால் இரண்டு நாளில் முதலீட்டாளர்கள் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி ரூபாய் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி விரைவில் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT