Published : 11 Sep 2018 04:46 PM
Last Updated : 11 Sep 2018 04:46 PM

இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு: ஓராண்டில் 11% வீழ்ச்சி

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதை கட்டுப்படுத்தும்படி ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவடைந்துள்ளது.

துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

நேற்று மாலை இந்திய ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்தது. ஆனால் இன்று மீண்டும் சரிவு கண்டது. இன்று பிற்பகல் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, 28 காசுகள் சரிந்து, 72. 73 ரூபாயாக வர்த்தகமானது. இந்த சரிவும், இதுவரை இல்லாத ஒன்றாகும்.

டாலரின் தேவை கடுமையாக உயர்ந்ததால் அதன் மதிப்பும் அதிகரித்தது. இதன் காரணமாகவே இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், அதனை உடனடியாக கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு நேற்று கேட்டுக் கொண்டது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடம் இருந்து வங்கி டெபாசிட் பெறுவது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டது. இந்த சூழ்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 சதவீதம் அளவில் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x