Published : 11 Sep 2018 12:31 PM
Last Updated : 11 Sep 2018 12:31 PM

பெட்ரோல் ரூ.55, டீசல் ரூ.50க்கு விற்க முடியும்: நிதின் கட்கரி

இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.55 வீதம், டீசல் விலை ரூ.50 வீதம் விற்பனை செய்ய முடியும், ஆனால் அதற்கு நாம் பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் பயோ எரிபொருள் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறைக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து, சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

''நெல், கோதுமை, கரும்பு உள்ளிவற்றின் கழிவுகள் தற்போது உபயோகமின்றி கொட்டப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி பயோ எரிபொருளை நாம் தயாரிக்க முடியும். பயோ எரிபொருளைப் பயன்படுத்தி முதன்முதலாக நாம் விமானத்தை இயக்கியுள்ளோம்.

கச்சா எண்ணெய்க்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் மற்றும் எரிவாயுப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயன் வந்து சேரும். பெட்ரோல், டீசலுக்காக நாம் 8 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைகிறது.

பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்து வருகிறது. இதன் மூலம் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்தியமானால் இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் விலை ரூ.55க்கும் விற்பனை செய்ய முடியும்.

இதுபோலவே பொதுப் போக்குவரத்து வாகனங்களான பேருந்து, ஆட்டோ, வாடகை கார், போன்றவற்றுக்கு எத்தனால், பயோ எரிபொருள் கட்டாயம் ஆக்கப்படும். இது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது''.

இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x