Published : 10 Sep 2018 10:32 AM
Last Updated : 10 Sep 2018 10:32 AM
இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவை சந்தித்தது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.
இந்தநிலையில், இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, 45 காசுகள் சரிந்து, 72.18 ரூபாயாக வர்த்தகமானது. இந்த சரிவும், இதுவரை இல்லாத ஒன்றாகும்.
அமெரிக்க - சீனா வர்த்தக மோதலால் டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் டாலரின் தேவை கடுமையாக உயர்ந்ததால் அதன் மதிப்பும் அதிகரித்தது. இதன் காரணமாகவே இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT