Published : 24 Aug 2018 04:00 PM
Last Updated : 24 Aug 2018 04:00 PM
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்து 21 மாதங்கள் முடிந்தபின்பும் கூட புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில் 18 ஆயிரத்து 135 ஏடிஎம் எந்திரங்களை எஸ்பிஐ வங்கி சீரமைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
நாட்டில் கறுப்புப்பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார்.
அதன்பின் மக்களின் புழக்கத்துக்காக ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக ஏடிஎம் எந்திரங்கள் ஏராளமானவை சீரமைக்கப்படாமல் இருந்தன.
இது குறித்து மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்.
அதில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின், எஸ்பிஐ வங்கி சார்பில் செயல்படும் ஏடிஎம் எந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளதா. எத்தனை எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, இன்னும் எத்தனை எந்திரங்களில் மாற்றம் செய்யப்படாமல் இருக்கின்றன என்று ஆர்டிஐ மனுவில் கேட்டிருந்தார்.
அதற்குக் கடந்த 18-ம் தேதி எஸ்பிஐ வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் எஸ்பிஐ வங்கிக்கு நாடுமுழுவதும் 59 ஆயிரத்து 521 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதில் 46 ஆயிரத்து 386 ஏடிஎம் எந்திரங்கள் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய ரூ.2000, ரூ.500, ரூ. 200 நோட்டுகளை வைப்பதற்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.22.50 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இன்னும் 18 ஆயிரத்து 135 ஏடிஎம் எந்திரங்கள் புதிய நோட்டுகளை வைப்பதற்காக எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT