Published : 10 Aug 2018 09:19 AM
Last Updated : 10 Aug 2018 09:19 AM

முதல் முறையாக 38,000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகின்றன. சென்செக்ஸ் குறியீடு 38,000 புள்ளிகளுக்கு மேலே முதல் முறையாக முடிவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 136 புள்ளி கள் உயர்ந்து 38,024 புள்ளியில் முடிவடைந்தது.

கடந்த ஜூலை 26-ம் தேதி சென்செக்ஸ் முதல் முறையாக 37,000 புள்ளியை தொட்டது. அடுத்த பத்து வர்த்தக தினங்களில் 38,000 புள்ளியை சென்செக்ஸ் தொட்டிருக்கிறது.கடந்த பத்து நாட்களில் சென்செக்ஸ் 2.7 சதவீதம் உயர்ந்திருந்தாலும் 200-க்கும் மேற் பட்ட பங்குகள் இரட்டை இலக்க அளவில் வளர்ச்சி அடைந்திருக் கின்றன. சில பங்குகள் 60 சதவீதம் அளவுக்கு கூட கடந்த பத்து நாட்களில் உயர்ந்திருக்கிறது.

இதேபோல நிப்டியும் 20 புள்ளிகள் உயர்ந்து 11,470 புள்ளியில் முடிவடைந்தது. வங்கி மற்றும் உலோகத்துறை பங்குகள் உயர்ந்ததால் பங்குச்சந்தையில் ஏற்றம் இருந்தது. நிப்டி பேங்க் குறியீடு அதிகபட்சமாக 28,320 புள்ளியில் முடிவடைந்தது. நிப்டி பட்டியலில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ, எஸ்பிஐ மற்றும் வேதாந்தா ஆகிய பங்குகள் 2.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தது.

ஐசிஐசிஐ தவிர ஐடிஎப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய பங்குகளும் உயர்ந்து முடிந்தன. மற்ற பொதுத்துறை வங்கி பங்குகளும் சிறிதளவு உயர்ந்து முடிந்தன.

பல காரணங்களால் சந்தை உயர்ந்து முடிந்திருக்கிறது. வங்கி மற்றும் மெட்டல் துறை பங்குகளின் தொடர் ஏற்றம் ஒரு காரணம். தவிர முக்கிய குறியீட்டில் ஐடிசி இருக்கிறது. இந்த நிறுவனம் புதிய சிகரெட் பிரிவினை அறிமுகம் செய் திருப்பதால் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பங்குசந்தை வல்லுநர் ஏ.கே.பிரபாகர் தெரிவித்தார்.

வங்கிகளின் கருவூல வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் வங்கி பங்குகள் உயர்ந்து வருவதாக ஆனந்த் ரதி நிறுவனத்தின் துணைத் தலைவர் கூறியிருக்கிறார்.

சீனாவில் உலோகத்துறையின் உற்பத்தி குறையக்கூடும் என்னும் எதிர்பார்ப்பு காரணமாக இந்திய மெட்டல் துறை பங்குகள் உயரத்தொடங்கி இருக்கின்றன.

இதற்கிடையே கடந்த புதன் கிழமை அந்நிய நிறுவன முதலீட் டாளர்கள் ரூ.568 கோடியை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய் திருக்கிறார்கள். உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.30 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள்.

சென்செக்ஸ் பட்டியலில் ஓஎன்ஜிசி, கோடக் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, எல் அண்ட் டி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹீரோமோட்டோ கார்ப், ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் மாருதி சுசூகி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன. பிஎஸ்இ-யில் வர்த்தகமாகும் 2,828 பங்குகளில் 1,351 பங்குகள் உயர்ந்தும், 1,341 பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x