Published : 09 Jul 2018 08:45 AM
Last Updated : 09 Jul 2018 08:45 AM
14 விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு கடந்த வாரம் உயர்த்தியது. இதனால் பணவீக்கம் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் நாட்டின் ஜிடிபியில் 0.1 முதல் 0.2 சதவீதம் வரையில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் டிபிஎஸ் நிறுவனம் தன்னுடைய ஆய்வில் தெரிவித்திருக்கிறது.
கடந்த நான்காம் தேதி நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (ஒரு குவிண்டாலுக்கு) ரூ.200 உயர்த்தப்பட்டது. இது தவிர மேலும் பல விவசாய பொருட்களுக்கான ஆதரவு விலை உயர்த்தப்பட்டது.
இதுதொடர்பாக டிபிஎஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது: ஜிடிபியில் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் நிதிப் பற்றாக்குறையை கவனமாக கையாள வேண்டியது அவசியமாகும். இந்த நிலையில் வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும், இல்லையெனில் மூலதன செலவுகளைக் குறைக்க வேண்டும்.
உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால், மத்திய அரசு உணவுக்காக செலவு செய்யும் மானியமும் அதிகரிக்கும். நடப்பு நிதி ஆண்டில் உணவு மானியத்துக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால் தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டிருப்பதால் ரூ.2 லட்சம் கோடியாக மானிய செலவு உயரும். அதேபோல நடப்பு நிதி ஆண்டின் இதர மாதங்களில் பணவீக்கம் 0.25 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை உயர்வாக இருக்கும்.
பணவீக்கம் உயர்வது, நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களால் ரிசர்வ் வங்கி, ரெபோ விகிதத்தை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்பு அதிகம். தவிர கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு ஒரு காரணமாக இருக்கும் என டிபிஎஸ் தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT