Published : 29 Jun 2018 08:53 AM
Last Updated : 29 Jun 2018 08:53 AM
மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அரசு அறிவித்துள்ளது.
3 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு உரிய ஆலோசனைகளை வழங்க விருப்பமுள்ள தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களையும் இணைப்பதன் மூலம் பொது காப்பீட்டில் மிகப் பெரிய நிறுவனமாக இது உருவாகும். அத்துடன் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும் என்று அரசு கருதுகிறது.
இந்த மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் 200-க்கும் அதிகமான காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்கின்றன. இவற்றின் மொத்த பிரீமியம் ரூ 41,461 கோடி ஈட்டியுள்ளன. இது பொது காப்பீட்டு துறையின் சந்தையில் 35 சதவீதமாகும். இம்மூன்று நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ 9,243 கோடியாகும். மொத்தம் 44 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். 6 ஆயிரம் அலுவலகங்களுடன் இவை செயல்படுகின்றன.
ஆலோசனை நிறுவனமானது நிர்வாக ரீதியில் எத்தகைய மாற்றங்களைச் செய்ய வேண்டும், பணியாளர்களை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது, நிர்வாக ரீதியில் எதிர்ப்படும் பிரச்சினைகள், காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணைய விதிமுறைகளுக்கேற்ப இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
மூன்று நிறுவனங்களையும் நன்கு ஆராய்ந்து அதன் பிறகு ஆலோசனை அளிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 16 ஆகும்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT