Published : 23 Jun 2018 08:26 AM
Last Updated : 23 Jun 2018 08:26 AM

மல்லையா தப்பியோடிய குற்றவாளி: அமலாக்கத் துறை கோரிக்கை

தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கவேண்டுமென மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்துள்ளது. வங்கியில் அதிக அளவில் கடன் பெற்று ஏமாற்றுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையிலான புதிய சட்டத்தின்படி விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுப்பதற்காக தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்க அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதன்மூலம் விஜய் மல்லையாவின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய இயலும்.

கடன்பெற்று தலைமறைவானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டத்தின் அடிப்படையில் மும்பை நீதிமன்றத்தில் இதுதொடர்பாக விண்ணப்பம் அளித்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மல்லையாவின் ரூ.12,500 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்ய அனுமதி அளிக்குமாறு அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பணமோசடி தடுப்பு சட்ட நடைமுறைப்படி வழக்கு விசாரணை முடிந்த பின்னர்தான் மல்லையாவின் சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ய இயலும். இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். எனவே வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றியவர்களின் சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யும் வகையில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா, கடந்த மார்ச் 12 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் நிலவிவந்த அமளி காரணமாக இந்த மசோதா பின்னர் அவசர சட்டமாக மாற்றப்பட்டது. கடந்த ஏப்ரல் 21 அன்று இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தனர். ரூ.100 கோடிக்கு மேலான நிதி மோசடிகளுக்கு இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x