Published : 02 Jun 2018 08:51 AM
Last Updated : 02 Jun 2018 08:51 AM

இந்தியா பர்ஸ்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 26% பங்குகளை வாங்கியது வார்பர்க் பின்கஸ்

இந்தியா பர்ஸ்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ் வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த லீகல் அண்ட் ஜெனரல் நிறுவனம் தன்வசம் உள்ள 26 சதவீத பங்குகளை விற்றிருக்கிறது. எவ்வளவு தொகைக்கு இந்த பங்குகள் விற்கப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் ரூ.710 கோடி இருக்கும் என சந்தையில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எங்களுடைய காப்பீட்டு தொழிலில் அணுகுமுறையை மாற்றி அமைத்து வருகிறோம். சமீப காலமாக நெதர்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறி முக்கியமான நாடுகளில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறோம். அதனால் இந்தியாவில் இருந்தும் வெளியேறி இருக்கிறோம். இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் உருவாகி இருப்பது மகிழ்ச்சிக்குரியது என லீகல் அண்ட் ஜென்ரல் நிறுவனத்தின் குழும இயக்குநர் சைமன் புர்கே தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளான ஆந்திரா வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த லீகல் அண்ட் ஜென்ரல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொடங்கிய நிறுவனம் இந்தியா பர்ஸ்ட் ஆகும். இதில் பேங்க் ஆப் பரோடா வசம் 44 சதவீத பங்குகளும், ஆந்திரா வங்கி வசம் 30 சதவீதமும் மற்றும் லீகல் அண்ட் ஜெனரல் வசம் 26 சதவீத பங்குகளும் உள்ளன. தற்போது 26 சதவீத பங்குகள் வார்பர்க் பின்கஸ் வசம் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x