Published : 02 Jun 2018 08:48 AM
Last Updated : 02 Jun 2018 08:48 AM

ஸ்டெர்லிங் பயோடெக் : ரூ.4,700 கோடி சொத்து பறிமுதல்; அமலாக்கத்துறை நடவடிக்கை

நிதிமோசடி சட்டத்தின் கீழ் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் ரூ.4,700 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் ரூ.5,000 கோடி வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களில் உள்ள சொத்துகள் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான புகாரில் மத்திய புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு பின்னர் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சிபிஐ புகார்

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்தி சேத்தன் சந்தேசரா, ராஜ்புஷான் ஓம் பிரகாஷ் தீட்ஷித், நிதின் ஜெயந்திலால் சந்தேசரா மற்றும் விலாஸ் ஜோஷி, ஆடிட்டர் ஹேமந்த் ஹாதி, அனூப் பிரகாஷ் ஜார்ஜ் உள்ளிட்டவர்களுடன் மேலும் சிலர்மீது வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளனர் என சிபிஐ புகார் பதிவு செய்திருந்தது.

ஆந்திரா வங்கி தலைமையினான வங்கி கூட்டமைப்பில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் ரூ.5,000 கோடி கடன் பெற்று கடனை திருப்பி செலுத்தவில்லை. 2016-ம் ஆண்டு டிசம்பர் 31 நிலவரப்படி இந்த குழுமத்தின் மொத்த நிலுவைத் தொகை ரூ.5,383 கோடி என்று சிபிஐ தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

கைது நடவடிக்கை

அமலாக்கத்துறை கூறுகையில், இந்த நிறுவனத்தில் 2011-ம் ஆண்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற போது முக்கிய குறிப்புகள் கொண்ட டைரி கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் சந்தேசரா சகோதரர்களால் 2008-ம் ஆண்டுக்கும் 2009-ம் ஆண்டுக்கும் இடையில் ஆந்திரா வங்கி இயக்குநர் ஜார்ஜுக்கு ரூ.1.55 கோடி வரை ரொக்க பணம் அளித்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் அமலாக்கத்துறை ஜார்ஜை கைது செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் குகன் தவானை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x