Published : 30 Apr 2018 09:15 AM
Last Updated : 30 Apr 2018 09:15 AM

தொடர் சீர்திருத்தங்கள் காரணமாக இந்தியாவுக்கான தர மதிப்பீடு உயரும்: பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் நம்பிக்கை

இந்தியாவுக்கான தரமதிப்பீட்டை பிட்ச் நிறுவனம் உயர்த்த மறுத்திருக்கிறது. தொடர்ந்து 12-வது ஆண்டாக தர மதிப்பீட்டை பிட்ச் நிறுவனம் உயர்த்த மறுத்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியா தரமதிப்பீட்டு உயர்வுக்கு தகுதியானது என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பிட்ச் நிறுவனம் இந்தியாவுக்கான தர மதிப்பீட்டை உயர்த்தாதது ஆச்சர்யம் அளிக்கவில்லை. பிட்ச் நிறுவனத்துடனான ஆலோசனையில் அரசாங்கத்தின் கடன் குறித்து பிட்ச் அதிகம் கவனம் செலுத்தியது. அதே சமயத்தில் இந்தியா தரமதிப்பீட்டு உயர்வுக்கு தகுதியானது என நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவின் செயல்பாடுகள், முக்கியமான குறியீடுகள் அனைத்தும் நிலையாக சாதகமாகவே இருக்கிறது.

தரமதிப்பீட்டு நிறுவனங்களுடன் அரசு தொடர்பில் இருக்கிறது. தரமதிப்பீட்டை உயர்த்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இதுவரை நாம் பல சீர்திருத்தங்களை செய்திருக்கிறோம். சர்வதேச அளவில் இவை மிகப்பெரிய சீர்திருத்தங்கள். ஒட்டுமொத்த மறைமுக வரி அமைப்பையே மாற்றி சரக்கு மற்றும் சேவை வரியினை அரசு அமல்படுத்தியிருக்கிறது.

வாராக்கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக திவால் சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். கட்டுமானத்துறைக்காக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் (RERA) உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடு தப்பிச்செல்வது தடுக்கப்பட்டிருகிறது. இது போன்ற சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்பதை தரமதிப்பீட்டு நிறுவனங்களிடம் வலியுறுத்தி இருக்கிறோம் என்று சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்தார்.

எஸ் அண்ட் பி தர மதிப்பீடு?

இந்தியாவுக்கான தரமதிப்பீடு `பிபிபி-’ என்னும் நிலையில் இருந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் இதே மதிப்பீட்டை பிட்ச் இந்தியாவுக்கு வழங்கியது. பலவீனமான நிதி நிலைமை தரமதிப்பீட்டை உயர்த்தாதற்கு காரணம் என பிட்ச் கூறியிருக்கிறது.

அரசாங்கத்தின் கடன் ஜிடிபியில் 69 சதவீதமாக இருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவுக்கான தரமதிப்பீட்டை மூடி’ஸ் நிறுவனம் உயர்த்தியது. அதனை தொடர்ந்து பிட்ச் நிறுவனத்தின் மதிப்பீட்டை உயர்த்துவதற்கு அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்தது.

இந்த நிலையில் ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) நிறுவனத்தையும் அரசு சந்தித்திருக்கிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

மீண்டும் அவர்களை சந்தித்து விளக்க இருக்கிறோம். ஆனால் இறுதி முடிவு அவர்களுடையது என சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்தார்.

சீர்திருத்தங்கள் தொடரும்

தேர்தல் வர இருக்கிற காரணத்தால் சீர்திருத்தங்களை குறைத்துக்கொள்ளவோ அல்லது நீர்த்துபோகவோ செய்யும் திட்டம் ஏதும் இல்லை. இதே வேகத்தில் சீர்திருத்தங்கள் தொடரும். மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்கள் வர இருக்கின்றன. நான் நேரடியாக கையாளுகிற நிதித்துறையில் பெரிய மாற்றங்கள் நடக்க இருக்கின்றன. போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட், பங்குச்சந்தை ஆகிய பகுதிகளில் சீர்திருத்தங்கள் தொடரும்.

தேர்தல் வரும் சமயமாக இருந்தாலும் சரி சீர்திருத்தங்கள் தொடரும். தேர்த்தலுக்காக இவற்றை குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை. தேர்தலுக்காக கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவிக்கும் திட்டம் இல்லை என்றும் கார்ஜ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x