Published : 06 Apr 2018 08:48 AM
Last Updated : 06 Apr 2018 08:48 AM

ஆர்-காம் சொத்து விற்பனை விவகாரம்: உயர் நீதிமன்ற தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர்-காம்) நிறுவன சொத்துகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விற்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 300 கோடி டாலர் சொத்துகளை ஆர்-காம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு விற்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் ஆர்-காம் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆர்-காம் நிறுவன சொத்துகளை விற்கலாம் என தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆர்-காம் நிறுவனம் ரூ.1,000 கோடி அளவுக்கு தொகையைத் தங்களுக்குத் தரவேண்டி இருப்பதால் ஆர்-காம் நிறுவன சொத்துகளை விற்க அனுமதிக்கக்கூடாது என ஸ்வீடனைச் சேர்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான எரிக்ஸன் தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆர்-காம் நிறுவன சொத்துகளை விற்பதற்கு தீர்ப்பாயம் தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து ஆர்-காம் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பாயத்தின் தடையை நீக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஆர்-காம் நிறுவன சொத்துகளை விற்க அனுமதி அளித்துள்ளது.

ஆர்-காமின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்பிராடெல் நிறுவனத்தின் சொத்துகளை விற்பது தொடர்பாக தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு சட்டத் தீர்ப்பாயத்தை (என்சிஎல்ஏடி) அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக ரிலையன்ஸ் இன்பிராடெல் நிறுவனத்தில் 5 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் ஹெஎஸ்பிசி டெய்ஸி முதலீட்டு நிறுவனம், ரிலையன்ஸ் இன்பிராடெல் நிறுவனத்தின் சொத்துகளை விற்க தடை விதிக்குமாறு தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்திடம் (என்சிஎல்டி) மனு அளித்தது.

இந்த மனுவை விசாரித்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தின் மும்பை அமர்வு ரிலையன்ஸ் இன்பிராடெல் நிறுவனத்தின் சொத்துகளை விற்க தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

என்சிஎல்டியின் தடை தொடர்பாக ஆர்-காம் நிறுவனம் விரைவில் என்சிஎல்ஏடியை அணுகும் என்று ஆர்-காம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ஆர்-காம் நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 3.4 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டு வர்த்தகமாயின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x