Published : 06 Apr 2018 08:46 AM
Last Updated : 06 Apr 2018 08:46 AM
வதோதராவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மீது ரூ.2,654 கோடி நிதி மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளது. எலெக்ட்ரிக்கல் கேபிள் அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் பல்வேறு வங்கிகளில் ரூ.2,654 கோடி நிதி மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்த டைமண்ட் பவர் இன்பிராஸ்டிரக்சர் நிறுவனம் எலெக்ட்ரிக் கேபிள்கள் உற்பத்தியில் ஈடுபடுகிறது. இந்த நிறுவனத்தை தொடங்கிய எஸ்.என்.பாத் நகர் அவரது மகன்கள் அமித் பாத்நகர், சுமித் பாத்நகர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். இவர்கள் வங்கிகளில் வாங்கிய கடன்கள் 2016-17 ஆண்டில் வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நீண்ட காலம் கடன், கடன் உறுதியளிப்பு வசதியை பயன்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் ஏற்கெனவே ரிசர்வ் வங்கி மற்றும் ஏற்றுமதி கடன் உறுதியளிப்பு கழகம்( இசிஜிசி) வெளியிட்ட மோசடியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு வங்கி அதிகாரிகளையும் சம்மதிக்க வைத்து இவர்கள் கடன் பெற்றுள்ளனர். மோசடியாக பங்கு விவரங்களை அளித்து வங்கிகளை ஏமாற்றியுள்ளனர் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT