Last Updated : 03 Mar, 2018 09:43 AM

 

Published : 03 Mar 2018 09:43 AM
Last Updated : 03 Mar 2018 09:43 AM

ரூ.333 கோடி செலவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின்3ஜி மொபைல் சேவை விரிவாக்கம்

ரூ.333 கோடியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3ஜி மொபைல் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள், 5 லட்சம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் கள் உள்ளனர். இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரூ.333 கோடியில் 3ஜி மொபைல் சேவையை விரிவுபடுத்துவது மற்றும் 2ஜி சேவை யின் தரத்தை உயர்த்தும் பணிகளை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை பொதுமேலாளர் (மொபைல் பிளானிங்) பி.சந்தோஷம் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

2011 மக்கள்தொகை கணக்கின்படி, தமிழக மக்கள்தொகை யான 6.09 கோடி பேரில் 5.91 கோடி பேர் மொபைல் இணைப்பை வைத்துள்ளனர். இதில் மற்ற நிறுவனங்களைவிட பிஎஸ்என்எல் மொபைல் சேவையை அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 1.22 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் 97,250 கி.மீ. சதுர பரப்பளவுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் கவரேஜ் உள்ளது. அதேபோல், தமிழகத்தில் உள்ள 14,433 கிராமங்களில் 12,162 கிராமங்களில் பிஎஸ்என்எல் மொபைல் சேவை உள்ளது. இதுதவிர, தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் வழித்தடங்களில் 96 சதவீதம் அளவுக்கு பிஎஸ்என்எல் மொபைல் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரூ.333 கோடி யில் 3ஜி நெட்வொர்க் சேவையை விரிவுபடுத்துதல் மற்றும் 2ஜி நெட்வொர்க் சேவையின் தரம் உயர்த்தப்பட உள்ளது. தற்போது 2ஜி சேவை வழங்கப்பட்டு வரும் இடங்களில் அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் அவற்றின் செயல்பாட்டு தரம் குன்றியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை கிடைப்பதில்லை. எனவே, நோக்கியா சீமென்ஸ் நிறுவனத்தின் 1,127 நவீன ரக 2ஜி பிடிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தரமான வாய்ஸ்கால், பிராட்பேண்ட் சேவை கிடைக்கும்.

திண்டுக்கல், காரைக்குடி, சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரக்கோணம், கொடைக்கானல், வாணியம்பாடி, பழனி, குடியாத்தம், பரமக்குடி, தேனியில் 2ஜி நெட்வொர்க் சேவையின் தரம் உயர்த்தப்படும். 3ஜி சேவையை விரிவுபடுத்த 1,428 3ஜி நோட் பி கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. 6 முதல் 8 மாதத்தில் இப்பணி நிறைவடையும். இதன் மூலம், கூடுதலாக 7.99 லட்சம் இணைப்புகளை ஏற்படுத்த முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x