Published : 13 Feb 2018 12:39 PM
Last Updated : 13 Feb 2018 12:39 PM
அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சில நூறு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது.
உலக அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் நிறுவனங்களில் அமெரிக்காவின் அமேசானும் ஒன்று. ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம், பல நாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்கி வருகிறது. எலெட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் பல சரக்கு என பல வகையான வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது.
உலகின் பல நாடுகளில் வணிக மையங்களை கொண்ட இந்நிறுவனத்தில் 5 லட்சத்து 66 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு புதிதாக பணியில் சேர்க்கப்பட்டனர். கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் அந்நிறுவனம் 13,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக தெரிவித்தது.
இந்நிலையில் அந்நிறுவனம் சில நூறு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. சியாட்டிலில் அமேசான் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் கணிசமானோரை ஆட்குறைப்பு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுபோலவே மற்ற நாடுகளிலும், குறிப்பிட்ட சில பிரிவுகளில் பணியாற்றும் சில நூறு ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
அமேசான் நிறுவனத்தின் வர்த்தகம் வெவ்வேறுபட்ட பரிமாணங்களில் மாறி வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாய்ப்பு இருந்தால் சில ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT