Published : 11 Feb 2018 09:01 AM
Last Updated : 11 Feb 2018 09:01 AM
சிடிஎம் ஸ்மித் அமெரிக்க நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீது சிபிஐ லஞ்சக் குற்றச்சாட்டை பதிவுசெய்துள்ளது. பல்வேறு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு சிடிஎம் ஸ்மித் நிறுவனம் 1.18 மில்லியன் அமெரிக்க டாலர்களை லஞ்சமாகக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பெங்களூரு மற்றும் சென்னையில் அமைந்துள்ள சிடிஎம் ஸ்மித் இந்தியா நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் பெங்களூருவில் உள்ள அதன் நிதி இயக்குநர் கோபகுமாரின் வீடு உட்பட ஐந்து இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டார்கள். சிடிஎம் ஸ்மித் இந்தியா நிறுவனத்தின் நிதி இயக்குநர் கோபகுமார், ஆர் வி இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எஸ் கிருஷ்ணமூர்த்தி, சிடிஎம் ஸ்மித் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் பெய ர்கள் முதல் தகவல் அறிக்கை யில் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
2011 முதல் 2016 வரையான காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக சிடிஎம் ஸ்மித் அமெரிக்க நிறுவனம் தன் இந்திய நிறுவனத்தின் வழியாக 1.18 மில்லியன் அமெரிக்க டாலர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டத்துக்கு புறம்பான இந்த நடவடிக்கைகளை மறைப்பதற்காக சிடிஎம் ஸ்மித் நிறுவனம் தனது வருமான வரி அறிக்கையில் இந்தத் தொகையை அனுமதிக்கப்பட்ட செலவினமாகக் காட்டியதும் தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அமெரிக்க நீதிமன்றமொன்றில் சிடிஎம் ஸ்மித் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்தப் பணப்பரிமாற்றங்கள் சிடிஎம் ஸ்மித் இந்தியா நிறுவனத்தின் நிதி இயக்குநர் கோபகுமார் வழியாக நடந்ததாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT