Published : 11 Feb 2018 09:00 AM
Last Updated : 11 Feb 2018 09:00 AM

கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி கவலைப்படத் தேவையில்லை: அருண் ஜேட்லி நம்பிக்கை

வரும் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை நிலைமை கட்டுக்குள் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறித்து உடனடியாக கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு உயர்ந்தால் பற்றாக்குறை அதிகரிக்குமா என்பது போன்ற யூகங்கள் அடிப்படையிலான கேள்விகளுக்கு இப்போது பதில் அளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த மூன்று நாள்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. வழக்கமாக பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு இதுபோன்ற கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் கடந்த நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்று எடுக்கப்பட்ட முடிவானது நடு நிலையானது என்றார். இப்போதிருக்கும் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அடுத்த ஆண்டு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்றே தோன்றுகிறது. இந்த கணிப்பானது வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இப்போதைய சூழலில் மிகப் பெரிய அளவுக்கு பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் மேலும் கூறினார். வங்கிகளில் அரசு மூலதனம் செய்ய உள்ளதால் வங்கிகளின் நிதி ஆதாரம் மேம்பட்டு கடன் வழங்குவது அதிகரிக்கும் என்றார். பொதுத்துறை வங்கிகளில் 2.11 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் செய்யும் முடிவானது வங்கிகளின் நிதி ஆதாரத்தை மேம்படுத்த உதவும் என்று கூறினார்.

இந்தக் கூட்டத்துக்கு முன்பாக காலையில் செபி இயக்குநர் குழு கூட்டத்திலும் ஜேட்லி பங்கேற்றார். அப்போது நிறுவன கடன் பத்திரங்களை பெரிதும் சார்ந்து இருப்பது அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் விகிதம் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கூறினார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x