Published : 01 Feb 2018 08:51 AM
Last Updated : 01 Feb 2018 08:51 AM

பிளிப்காட்ர்டில் 20 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டம்

உலகின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவின் முக்கிய மான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் 15 சதவீதம் முதல் 20 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டிருக்கிறது. வால்மார்ட் நிறுவனத்தின் சர்வதேச தலைமைச் செயல் அதிகாரி டோ மேக்மில்லன் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளிப்கார்ட் நிறுவனத்தில் 100 கோடி டாலர் வரை முதலீடு செய்ய வால்மார்ட் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கருத்துகூற மறுத்துவிட்டார்.

இதுதொடர்பாக வால்மார்ட் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, வால்மார்ட்டை பொறுத்தவரை இந்தியா மிக முக்கியமான சந்தை. இந்தியாவில் மூன்று பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விவாதிப்பதற்காக சர்வ தேச தலைமைச் செயல் அதிகாரி இந்தியா வந்திருந்தார். இந்திய சந்தையில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் சந்தை யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறினார்.

ஒருவேளை வால்மார்ட் நிறுவனம் முதலீடு செய்யும் பட்சத்தில் நிதி சார்ந்த பலத்தை பெறுவது மட்டுமல்லாமல், சப்ளை செயின், பொருட்களை வாங்குவது, வகைப்படுத்துவது உள்ளிட்ட பலங்களும் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு கிடைக்கும்.

பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் முதலீடு செய்திருக்கிறது. இந்த நிலையில் வால்மார்ட் முதலீடு செய்யும் பட்சத்தில் அமேசான் நிறுவனத்துடன் போட்டி போடுவது எளிமையாக இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நடப்பு நிதி ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் 250 கோடி டாலரை பிளிப்கார்டில் முதலீடு செய்தது. தவிர டென்சென்ட், மைக்ரோசாப்ட் மற்றும் இபே ஆகிய நிறுவனங்கள் இணைந்து 150 கோடி டாலர் அளவுக்கு பிளிப்கார்டில் முதலீடு செய்திருக்கிறது. அமேசான் நிறுவனமும் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x