Published : 28 Jun 2016 09:53 AM
Last Updated : 28 Jun 2016 09:53 AM

தொழில் முன்னோடிகள்: ஜோஸையா வெட்ஜ்வுட் (1730 - 1795)

அழகிய படைப்புகளைத் தற்செயலா கவோ, குறைந்த செலவிலோ உரு வாக்க முடியாது. வேலைத்திறனைக் கருத்தில் கொள்ளாமல் குறைந்த விலையை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கும் மனப்போக்குத்தான், கலைகள், தொழில் கள் ஆகியவற்றின் வீழ்ச்சிக்கும், அழிவுக் கும் காரணம்.

- ஜோஸையா வெட்ஜ்வுட்

காட்பரீஸ் சாக்லெட். ``ஸ்வீட் எடு, கொண்டாடு” என்கிறார் அமிதாப் பச்சன். அடுத்து, பிரபு, ஐஸ்வர்யா ராயோடு சேர்ந்து நம்மை சென்னை தி.நகர் கல்யாண் ஜூவல்லரி கடைக்கு அழைக் கிறார். ஓரியோ பிஸ்கெட்டும், ப்ரூ காப்பியும் தந்து உபசரிக்கும் கார்த்தி; அது வேண்டாம், நெஸ்கஃபே சாப்பி டுங்கள் என்று விருந்தோம்பும் சூர்யா, ஜோதிகா; ``என் சக்தியின் ரகசியம் பூஸ்ட்” என்று கோப்பையை நீட்டும் தோனி.

ஷாருக் கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார், ரன்பீர் கபூர், சித்தார்த், கத்ரினா கெய்ஃப், பிரியங்கா சோப்ரா, ஜூஹி சாவ்லா, விஷால், ஆர்யா, சித்தார்த், சரத்குமார், நாசர், மோகன்லால், ஜெய ராம், ராதிகா, தேவயானி, நயன்தாரா, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், நமிதா, விராட் கோலி.....கண்களைக் கூசவைக் கும் நட்சத்திர அணிவகுப்பு, ஜொலி ஜொலிப்பு.

இந்த விளம்பர ஜிகினா விற்ப னையைப் பிரபலங்கள் பரிந்துரை (Celebrity Endorsement) என்று மார்க்கெட் டிங்கில் சொல்கிறோம். இந்த பிரபலங் களை பிரான்ட் தூதுவர்கள் (Brand Ambassadors) என்று அழைக்கிறோம்.

இந்தப் பிரபலங்கள் பரிந்துரை விளம்பர முறையை முதன்முதலாகப் பயன்படுத்தியது யார்? காட்பரீஸ் சாக்லெட்டா, கல்யாண் ஜூவல்லரியா, ஓரியோ பிஸ்கெட்டா, ப்ரூ காபியா, நெஸ்கஃபேயா, பூஸ்ட்டா? இல்லை, இல்லை, இவர்கள் யாருமேயில்லை. அந்தக் கண்டுபிடிப்பாளர் ஜோஸையா வெட்ஜ்வுட்.

இங்கிலாந்தின் ஸ்டோக் ஆன் டிரெண்ட் நகரம் ஷேக்ஸ்பியர் பிறந்த பெருமை பெற்றது. இந்த நகரத்தில் பர்ஸ்லெம் என்னும் பகுதிக்கு இன்னொரு சிறப்பு. இங்கே அருமையான களிமண் வகைகள் கிடைக்கும். ஆகவே, 12 ஆம் நூற்றாண்டு முதல் வீட்டுக்கு வீடு குடிசைத் தொழிலாக ஏராளமான மண்பாண்டத் தொழிற்சாலைகள். தாமஸ் வெட்ஜ்வுட் அப்படிப்பட்ட ஒரு துக்குனூண்டுத் தொழிற்சாலைக்கு முதலாளி. பதின்மூன்று குழந்தைகள். கடைசிக் குழந்தை ஜோஸையா.

ஜோஸையா பள்ளிக்கூடம் போனான். குடும்ப வறுமை. படிப்பை நிறுத்தினார் கள். ஒன்பது வயதுப் பிஞ்சுக் கரங்கள் அப்பாவோடும், பிற குடும்பத்தாரோடும் களிமண் பிசையத் தொடங்கின. ஆனால், ஜோஸையா இதை வேலையாகச் செய்யவில்லை. விளையாட்டாக, ரசித்து, அனுபவித்துச் செய்தான். அவர்கள் வீட்டில் பீங்கான் பொருட்கள் தயாரித்தார்கள். குயவர் சக்கரம் என்னும் இயந்திரத்தில் வடிவமைத்து, உலையில் சுட வைப்பார்கள். அந்த சிறுவயதிலேயே ஜோஸையா பொருட் களைப் பாத்திரங்களாகப் பார்க்கமாட் டான். அவன் கண்களுக்கு அவை கலை வடிவங்கள். காலால் இயக்கும் அந்த சக்கரங்களை வாழ்நாள் முழுக்க ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும், அழகழகான வடிவங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஜோஸையாவின் கனவு.

இரண்டே வருடங்கள். கனவில் இடி விழுந்தது. ஜோஸையாவுக்கு அம்மை நோய் வந்தது. அன்றைய நாட்களில் பெரிய வியாதி. உயிர் பிழைத்தாலும், உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வலது முட்டி பலகீனமானது. கீழே உட்காருவதே சிரமம். கால்களால் குயவர் சக்கரத்தை இயக்குவது முடியவே முடியாது. ‘‘நம் ஊரில் ஒரே தொழிலே இதுதான். இந்தப் பையன் இனிமேல் என்ன செய்வானோ?” என்று வீட்டிலும், உறவினர்கள் மத்தியிலும் கவலைகள், பரிதாபப் பார்வைகள்.

ஆனால், இந்தப் பதினொரு வயது உடம்புக்குள் வைரம் பாய்ந்த இதயம் இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஜோஸையாவுக்கும் தன் உடல் ஊனம் அதிர்ச்சி தந்தது. ஆனால், தலை சிறந்த குயவராகும் லட்சியத்தை இந்த ஊனம் தடுத்துவிடமுடியாது என்று அசைக்கமுடியாத வெறி, நம்பிக்கை. மண்பாண்டங்கள் தயாரிக்கும் துறை பற்றிய புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தான். அவற்றில் வரும் வடிவமைப்பு களை, தயாரிப்பு முறைகளை வீட்டில் சோதனை செய்துபார்த்தான். 20 வயதாகும்போது, அந்த ஏரியாவின் மண்பாண்டத் துறை நிபுணர்களில் ஒருவராகிவிட்டான்.

தாமஸ் வீல்டன் என்னும் தொழிலதிபர் ஜோஸையாவின் திறமையைப் பார்த்தார், ஆச்சரியப்பட்டார். தன் தொழிற்சாலையில் வேலை கொடுத்தார். பரிசோதனைகளைத் தொடர வசதிகள் தந்தார். பெரிய தொழிலகத்தை எப்படி நடத்தவேண்டும் என்னும் அனுபவமும் ஜோஸையாவுக்குக் கிடைத்தது. இந்தத் தைரியத்தில், தன் 29 ஆம் வயதில் சொந்தத் தொழிற்சாலை தொடங்கினார்.

போட்டிகள் அதிகம் நிறைந்த தொழில். சாதாரணமாக மார்க்கெட்டைப் பிடிக்க எல்லோரும் எடுக்கும் ஆயுதம் “விலைக் குறைப்பு.” ஜோஸையா இதைச் செய்ய வில்லை. புதிய வியூகம் வகுத்தார். ‘‘என் தயாரிப்புப் பொருட்களின் கலை நயம், உயர்தரம் ஆகியவை வித்தியாச மானவையாக, தனித்துவமானவையாக இருக்கும்; இதனால் விலையும் அதிக மாகவே இருக்கும்” என்றார். ஆகாசக் கோட்டை கட்டும் இந்த இளைஞன் கீழே விழும் நாளை எல்லோரும் எண்ணத் தொடங்கினார்கள்.

பெர்ஸ்லெம் நகரில் எல்லோரும் சாதாரண மண், பீங்கான் பொருட்கள் தயாரித்தார்கள். சீனாவில் பச்சை மெருகிட்ட மண் பாண்டங்கள் பிரபலம். களிமண்ணில் பாண்டங்கள் செய்து, ஈயம், செம்பு போன்ற உலோகத் தாதுக்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து, உலையில் 800 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்குச் சுடவைத்தால், பச்சை நிறப் பளபளப்பு வரும். ஜோஸையா இந்தப் பச்சைப் பளபள பாத்திரங்கள் தயாரித்தார். சிலவற்றில் கண் கவர் ஓவியங்கள். ஒவ்வொன்றும் அழகோ அழகு! விலை அதிகம்தான். ஆனால், ஜோஸையாவின் பாத்திரங்களை வீட்டில் வைத்திருப்பது சமுதாய அந்தஸ்து என்று மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள். மிக விரைவில் உயர் மட்டத்தினர் மனங்களிலும், வீடுகளிலும் அரியாசனம் போட்டுவிட்டார்.

இப்போது அடித்தது ஒரு ஜாக்பாட். ஜோஸையாவின் படைப்புகளை அப்போது இங்கிலாந்து அரசராக இருந்த மூன்றாம் ஜார்ஜ் மனைவியார் ராணி ஷார்லெட் பார்த்தார். மனம் மயங்கினார். அரண்மனையின் அத்தனை மண், பீங்கான் பாத்திரங்களும் ஜோஸையா படைப்புகளுக்கு இடம் கொடுத்து விலகின. ராணியாரின் எல்லா விருந்துகளிலும் தவறாமல் இடம் பெற்றன. “ராணியாரின் பாத்திரங்கள்” என்று மக்கள் செல்லப் பெயரால் அழைக்குமளவுக்குப் புகழ் பெற்றன.

ராணியாருக்கு ஒரு ஆசை தங்க முலாம் பூசிய மண் / பீங்கான் பாத்திரங்கள் அப்போது யாராலுமே தயாரிக்கப்படவில்லை. “முடியுமா?” என்று ஜோஸையாவிடம் கேட்டார். சவாலே, சமாளி என்பது ஜோஸையா கொள்கை. அதுவும், மகாகணம் பொருந்திய மகாராணியார் புலிப்பால் கேட்டாலும் கொடுக்கவேண்டாமா? சில மாதங்கள் ராட்சச உழைப்பு. தங்கம் இழைத்த பாத்திரங்கள் ராணியார் முன் சமர்ப்பிக்கப்பட்டன. ராணியார் சந்தோஷத்தின் உச்சிக்குப் போனார். “என்ன வேண்டும்?” என்று கேட்டார். ஜோஸையா ஒரு வேண்டுகோள் வைத் தார் தங்க முலாம் பூசிய பாத்திரங் களுக்கு ‘‘மகாராணியார் வரிசை” என்று பெயர் வைக்க அனுமதிக்கவேண்டும். சம்மதித்த ராணியார் இன்னும் ஒரு படி மேலே போனார். “ராணியாரின் மண் பாண்டக் கலைஞர்” என்னும் பட்டம் தந்தார். இந்த விருதைத் தயாரிப்புப் பாண்டங்களில் பயன்படுத்திக்கொள்ள வும் அனுமதித்தார். மகாராணியாரின் இந்த அங்கீகாரத்தால், விரைவில், அமெரிக்க வெள்ளை மாளிகை, ரஷ்யக் கிரெம்ளின், ஆகிய ஆட்சி மையங்களி லும், உயர்மட்டத்தினர் மாளிகைகளிலும் ஜோஸையாவின் தயாரிப்புகள் தவறா மல் இடம் பிடித்தன.

ஜோஸையாவின் புதுமைத் தேடல் வீரியம் குறையாமல் தொடர்ந்தது. பச்சை, தங்க முலாம் பாண்டங்களுக்கு அடுத்து, கறுப்பு நிறப் பாத்திரங்கள், சிலைகள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள் என வரிசை வரிசையாகத் தயாரிப்புகள் வந்தன. அனறைய பிரபல ஓவியக் கலைஞர்களை ஜோஸையா வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் கற்பனை சிறகடித்துப் பறக்க ஊக்கமளித்தார்.

ஜோஸையா மனிதநேயம் கொண்ட முதலாளி. தொழிலாளிகளுக்கு இலவச வீடு வசதி, மருத்துவ உதவிகள் தந்தார். அன்றைய நாட்களில் உழைப்பாளிகள் கனவில்கூட நினைத்துப் பார்க்கமுடியாத சலுகைகள் இவை.

1768. ஜோஸையா வயது 38. இப்போது வந்தது ஒரு சோதனை. சிறு வயது முதலே பிரச்சினை கொடுத்து வந்த வலது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது . ஆறவே இல்லை. மருத்து வர்கள் பரிசோதித்தார்கள். முட்டிக்கு மேலிருந்து தொடையின் கொஞ்ச பாகம்வரை அறுவை சிகிச்சை செய்து காலை வெட்டி எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். ஆபரேஷன் முடிந் தது. காலை இழந்தவர் தொழிலிலிருந்து விலகிவிடுவார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஓய்வு எடுத்தார். ஆனால், சில மாதங்களுக்குத்தான். விஸ்வரூபம் எடுத்துவந்தார். அடுத்த 26 வருடங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை. தொழிலில் பல புதுமைகள். இதையும் தாண்டி, அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடினார். வாழ்ந்தால் இப்படியல்லவா வாழவேண்டும்?

கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

$ உடல் ஊனங்கள் வெற்றி இலக்கைத் தொடுவதைத் தடுக்கமுடியாது என்று நிரூபித்த நெஞ்சுரம்

$ தயாரிப்புப் பொருட்களின் தனித்துவம்

$ ‘‘என் ஆயுதம் விலைக் குறைப்பல்ல, அழகு கொஞ்சும் பொருட்கள்” என்னும் வித்தியாச வியூகம்

$ பிரபலங்கள் பரிந்துரை என்னும் விளம்பர யுக்தி

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x