Published : 30 Jan 2017 10:57 AM
Last Updated : 30 Jan 2017 10:57 AM

தொடர்ந்து 6-வது மாதமாக பங்குச்சந்தையில் மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்கிறது

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து ஆறாவது மாதமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்துவருகின்றன. ஜனவரியில் இதுவரை ரூ.4,777 கோடி அளவுக்கு (ஜனவரி 25 வரை) பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளன. இதே காலகட்டத்தில் இந்திய கடன் சந்தையில் ரூ.30,000 கோடியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

கடந்த ஜூலை மாதம் பங்குச்சந்தையில் இருந்து 34 கோடியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வெளியே எடுத்தன. அதற்கடுத்த மாதங்களில் தொடர்ந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் ரூ.2,717 கோடி, செப்டம்பர் மாதம் ரூ.3,841 கோடி, அக்டோபர் மாதம் ரூ.9,129 கோடி, நவம்பர் மாதம் ரூ.13,775 கோடி, மற்றும் டிசம்பர் மாதத்தில் ரூ.9,719 கோடியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளன. இந்த ஆறு மாத காலத்தில் மொத்தம் ரூ.43,000 கோடி அளவுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக பங்குச்சந்தையில் சரிவு ஏற்படும்போதுதான் மியுச்சுவல் பண்ட் மேலாளர்கள் முதலீடு செய்வார்கள். சிறு முதலீட்டாளர்கள் தொடர்ந்து மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதால்தான், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவுத்தலைவர் வித்யா பாலா தெரிவித்தார்.

மேலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும்போது, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்வார்கள். தற்போதும் அதுதான் நடக்கிறது என அவர் கூறினார்.

ரூ.5,600 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

இந்திய சந்தையில் இருந்து ஜனவரி மாதத்தில் இதுவரை ரூ.5,600 கோடி வெளியேறி இருக்கிறது. ஜனவரி 27 வரை இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.2,139 கோடியும், இந்திய கடன் சந்தையில் இருந்து ரூ.3,465 கோடியும் வெளியேறி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x