Published : 23 Jan 2015 11:27 AM
Last Updated : 23 Jan 2015 11:27 AM
காற்றாலை மின்உற்பத்திக்கான டர்பன் தயாரிப்பு நிறுவனமான சுஸ்லான் தன்னுடைய ஜெர்மனி துணை நிறுவனமான சென்வியானை (Senvion) ரூ.7,200 கோடிக்கு விற்றது. சென்டர்பிரிட்ஜ் பார்ட்னர்ஸ் என்னும் அமெரிக்க முதலீட்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நிறுவனத்தின் வசம் இருக்கும் கடன்களை அடைக்க இந்த நிறுவனம் விற்கப்பட்டது. மேலும் இந்த பரிவர்த்தனை முழுவதும் ரொக்கமாகவே நடை பெற்றிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்துக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி வேண்டும். நிறுவனத்தின் கடனை குறைக்கவும், முக்கிய சந்தைகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, தென் ஆப்ரிக்கா, துருக்கி மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் வளர்ச்சியை அதிகரிக்கவும் இந்த நிறுவனம் விற்கப்பட்டதாக சுஸ்லான் தெரிவித்துள்ளது.
சுஸ்லான் நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மொத்தமும் 16,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டுக்குள் இந்த பரிவர்த்தனை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுடைய நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த இந்த நிறுவனம் விற்கப்பட்டது. இதன் மூலம் கடன் குறையும் அதனால் வட்டி செலுத்துவதும் குறையும் என்று சுஸ்லான் நிறுவனத்தின் தலைவர் துல்சி டான்டி தெரிவித்தார்.
2001-ம் ஆண்டு ஆர்.இ.பவர் என்னும் நிறுவனம் தொடங்கப் பட்டது. இந்த நிறுவனத்தை சுஸ்லான் நிறுவனம் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கியது. அதன் பிறகு 2013-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பெயரை சென்வியான் என்று மாற்றம் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT