Published : 16 May 2016 09:40 AM
Last Updated : 16 May 2016 09:40 AM
2016-17 நிதியாண்டின் முதல் மாதத்திலேயே ஆன்லைன் மூலம் வருமான வரித் தாக்கல் செய்வது 68.5 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இ-பைலிங் மூலமாக 8.32 லட்சம் வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்களை மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2015-16 நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் 4.94 லட்ச படிவங்கள் மட்டுமே ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஒட்டு மொத்த நிதியாண்டில் 4.33 கோடி வரு மான வரி படிவங்கள் மட்டும் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் தகவலின் படி கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 8,32,499 வருமான வரித் தாக்கல் படிவங்கள் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் கடந்த வருடம் 9 வகையில் வருமான வரித் தாக்கல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்தியது. மேலும் எளிதாக வரித் தாக்கல் செய்யும் முறைகளை இந்த வருடம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே வீட்டிலிருந்தே எளிதாகவும் விரைவாகவும் தாக்கல் செய்யும் அளவுக்கு இ-பைலிங் முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் தகவல் படி கடந்த மாதம் ஏப்ரல் 30ம் தேதி வரை 5.25 கோடி பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் அலுவலக நேரங்களை தவிர மற்ற நேரங்களில் வருமான வரித் தாக்கல் செய்து உள்ளார்கள். அதாவது மொத்தம் வருமான வரி தாக்கல் செய்தவர்களில் 49.54 சதவீதம் பேர் அலுவலக நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தாக்கல் செய்திருக்கின்றனர். மேலும் ஆன்லைனில் வரி தொடர்பான கால்குலேட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் புதிய படிவங்களை மார்ச் மாதம் 30ம் தேதி அறிவித்தது. மேலும் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என்றும் கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிக நபர்கள் வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர். அதையெடுத்து குஜராத், தமிழ்நாடு, உத்தர பிரதேச மாநிலத்தினர் அதிக நபர்கள் வருமானம் வரித் தாக்கல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT