Published : 25 Oct 2016 10:45 AM
Last Updated : 25 Oct 2016 10:45 AM
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீஸ் பயிற்சி மையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி முகாமில் திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பயிற்சிக் காவலர்கள் 41 பேர் பலியாகினர். காவலர்கள், துணை ராணுவப்படையினர் என 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, "பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டிய காவலர்கள் இத்தாக்குதலில் பலியாகியிருக்கின்றனர். இத்தருணத்தில் பாகிஸ்தான் மக்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் துணையாக நிற்கிறோம். எதிர்காலத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தோள் கொடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இதுவே மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது. இது தொடர்பான விரிவான செய்திக்கு-> | பாகிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தில் தீவிரவாத தாக்குதல்: பயிற்சிக் காவலர்கள் 41 பேர் படுகொலை |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT