Last Updated : 16 Dec, 2014 11:15 PM

 

Published : 16 Dec 2014 11:15 PM
Last Updated : 16 Dec 2014 11:15 PM

பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல்

பயங்கரவாதத்துக்கு குழந்தைகளை பலிகொடுத்த அண்டை நாடான பாகிஸ்தானின் மக்களுக்கு, ட்விட்டர் மூலம் இந்தியர்கள் தெரிவித்த ஆறுதல் நெகிழவைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை குறிவைத்து தாலிபான் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியாகினர்.

தாக்குதல் தொடங்கியது முதலே ட்விட்டரில் #PeshawarAttack என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.

இந்தக் கொடூரத் தாக்குதலின் தன்மை தொடர்பாக செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், ட்விட்டரில் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் இட்ட பதிவுகளின் எண்ணிக்கை மிகுதியாகத் தொடங்கியது. நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட பதிவுகள் இடப்பட்டன.

இதையடுத்து, இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் 'பாகிஸ்தானுடன் இந்தியா' எனப் பொருள்தரும் >#IndiawithPakistan என்ற ஹேஷ்டேக் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

இந்திய இணையவாசிகள் ஆறுதல் வார்த்தைகளை சகோதரத்துவத்துடன் பகிர்ந்தவண்ணம் இருந்தனர். இது, உலக அளவில் ஊடகங்களால் செய்திகளாகப் பதிவாகின.

அதேபோல், இதே ஹேஷ்டேக்கை மேற்கோள்காட்டி, பாகிஸ்தான் மக்கள் ட்விட்டரில், இந்தியர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இந்தியர்களின் ஆறுதல் வார்த்தைகளானது நாடு, மொழி, இனம் கடந்து மனிதம் தழைப்பதை உணர்த்துவதாக, அவர்களில் பலர் பதிவிட்டனர்.

குறிப்பாக, இந்தியர்களின் சோகம் மிகுந்த பதிவுகளுக்கு, சகோதர - சகோதரிகளே உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பாகிஸ்தானியர்கள் பதில் பதிவுகள் இட்டனர்.

இதேபோல், பயங்கரவாதத்தின் மோசமான விளைவுகள் குறித்தும், அதற்கு எதிராகவும் இரு நாட்டினரும் தங்கள் கருத்துகளை பதிந்தவண்ணம் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x