Last Updated : 28 May, 2015 04:17 PM

 

Published : 28 May 2015 04:17 PM
Last Updated : 28 May 2015 04:17 PM

படுக்கையில் அயர்ந்த அந்நியன்: அசராது செல்ஃபி எடுத்த பெண்

தனது வீட்டில் திருட வந்த மர்ம நபர் படுக்கையறையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு கிடைத்த இடைவேளையில் ஒரு செல்ஃபி எடுத்திருக்கிறார் வெளிநாட்டுப் பெண் ஒருவர்.துபாயில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து காலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "துனிசியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் துபாயில் பணி புரிந்து வருகிறார். புர்துபாய் குடியிருப்பில் வசித்து வருகிறார். வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டுக்குள் சென்ற அவர் தனது படுக்கையறையில் போதையில் ஒரு நபர் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அந்த அதிர்ச்சியிலும் அவர் சற்று இளைப்பாறுதலை தேடியுள்ளார். நல்ல உறக்கத்தில் இருந்த அந்த அந்நியனுடன் ஒரு செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும், அந்த செல்ஃபிக்கு அவர் அளித்த விளக்கத்தில், "வீட்டுக்குள் நுழைந்ததும் என் படுக்கையறையில் குடிகாரர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். அவர் என் வீட்டில் திருட முயற்சித்துள்ளார். ஆனால் அது நடைபெறவில்லை" என குறிப்பிட்டுள்ளார். இந்த செல்ஃபி இப்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

சம்பவம் தொடர்பாக துபாய் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளது போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மர்ம நபர் திருடன் அல்ல. அவர் அந்த குடியிருப்பில் வேலை பார்க்கும் தனது நண்பனை பார்க்க வந்துள்ளார். வந்த இடத்தில் இருவரும் மது அருந்தி இருக்கின்றனர். பின்னர் துனிசிய பெண் பிளாட்டுக்குள் நுழைந்த அவர் அங்கேயே தூங்கிவிட்டார். அவரை கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x