Last Updated : 18 Jan, 2017 12:03 PM

 

Published : 18 Jan 2017 12:03 PM
Last Updated : 18 Jan 2017 12:03 PM

நைஜீரிய விமானப் படை வான்வழித் தாக்குதலில் 52 பேர் பலி

நைஜீரிய விமானப் படை தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அகதிகள் முகாமிலிருந்த 52 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து மெடிசின்ஸ் சான்ஸ் மனித உரிமை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில், இஸ்லாமிய அமைப்பான போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரிய விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் அகதிகள் முகாமிலிருந்த 52 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.

இந்த வான்வழித் தாக்குதலில் நைஜீரிய செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பலியனாதாகவும், 13 பேர் காயமடைந்தாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் கிளர்ச்சியில் இதுவரை 15,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து போகோ ஹராம் இயக்கத்தினர் நைஜீரிய அரசுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை போகோ ஹராம் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் ஷேக்கவ், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், 'சமீபத்தில் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைப் படை தாக்குதலை எங்கள் இயக்கம்தான் நடத்தியது' என்றார். இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x