Last Updated : 16 May, 2015 03:50 PM

 

Published : 16 May 2015 03:50 PM
Last Updated : 16 May 2015 03:50 PM

எகிப்து முன்னாள் அதிபர் மொர்சிக்கு மரண தண்டனை: கெய்ரோ நீதிமன்றம் உத்தரவு

எகிப்து முன்னாள் அதிபர் மொர்சிக்கு மரண தண்டனை விதித்து கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி தீர்ப்பை வழங்கியபோது, மொர்சி ஆவேசத்துடன் தனது கையை உயர்த்திக்காட்டி எதிர்ப்பை தெரிவித்தார்.

கடந்த, 2011-ல் சிறைச்சாலையை உடைத்து கைதிகளை தப்பிக்கச் செய்த குற்றத்துக்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 20,000 கைதிகள் அப்போது தப்பித்தனர்.

எகிபது அரசியல் வரலாற்றில் அதிபர் பதவி வகித்த ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக கடந்த மாதம், எகிப்தில் போராட்டக்காரர்களை கொன்ற குற்றத்துக்காக அந்நாட்டு முன்னாள் அதிபர் மொர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளில் தண்டனை அளிக்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். அதில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில், மொர்சிக்கு மரண தண்டனை விதித்து கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரண தண்டனை வழங்கப்படும்போது, நீதிபதி அதை முஸ்லிம் மதத் தலைவரின் கருத்துக்கு பரிந்துரைப்பது எகிபது மரபு. அதன் அடிப்படையில் மொர்சிக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி ஷபான் எல் ஷமி, அந்த தீர்ப்பை மத குரு பரிசீலனைக்கு அனுப்பியுள்ளார்.

எகிப்து நாட்டில் முகமது மொர்சியின் ஆட்சி காலத்தின்போது அவருக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2012-ல் தலைநகர் கெட்ரோவில் மாபெரும் முற்றுகை பேரணி நடத்தப்பட்ட போது, அதனை தடுக்க மொர்சிக்கு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதனை அவர்கள் ஏற்க தவறியதால், தனது ஆதரவாளர்களை விட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதில் போலீஸார் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

தொடர் போராட்டங்கள், சர்வதேச அழுத்தங்களை அடுத்து, அவரது பதவியை 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவம் வலுக்கட்டாயமாக கைபற்றி, அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் அதிகாரத்தை செயலிழக்க செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x