Published : 18 Dec 2015 10:44 AM
Last Updated : 18 Dec 2015 10:44 AM

இன்னும் அடங்காத ஈழத்தின் ஓலம்: விரக்தியின் விளிம்பில் தொப்புள் கொடி உறவுகள்

இலங்கை இனப் போரின் இறுதிக்கட்ட மர்மங்கள் இன்னும் விலகாத நிலையில் போருக்குப் பிறகான ஈழத் தமிழர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

போரில் பாதிக்கப்பட்ட தமிழர் களை மீள் குடியேற்றம் செய்யவும் அவர்களுக்கான புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசாங்கம் அளித்த வாக்குறு திகள் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. போர் முடிவில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இளம் யுவதிகளை ராணுவம் அழைத்துச் சென்றது. அவர்களில் யாரும் இன்னமும் வீடு திரும்பவில்லை. இப்படி ராணுவம் பிடித்துச் சென்ற ஆயிரக்கணக்கான இளையோரின் கதி என்னவென்றும் தெரிய வில்லை.

இந்நிலையில், அண்மையில், புலிகள் அமைப்பின் பெண் தலைவி தமிழினி, வவுனியா ராணுவ சிறையில் மர்மமான முறையில் இறந்தார். நவம்பர் 26-ல் பிரபாகரன் பிறந்த தினத்தில், யாழ்ப்பாணத்தில் செந்தூரன் என்ற மாணவர் ராணுவத்தின் பிடியில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ரயிலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்ட துயரமும் நடந்தது.

“இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப் பும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் (தேர்தல் அறிக்கை) சொல்லி இருந்தது. போர் கைதிகளை விடுவிக்கவும் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுப்போம் என்று பிரச்சாரம் செய்தார் மைத்ரிபால சிறிசேனா. எதுவும் நடக்க வில்லை.

சில இடங்களுக்கு சாலைகள், இரும்புப் பாதைகள் அமைத்ததும் கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே யாழ் தேவி ரயில் விட்டதும் மட்டுமே அபிவிருத்திப் பணிகள் ஆகிவிடுமா?” என்கிறார் யாழ் நகரின் ஓய்வுபெற்ற ஆசிரியர் மகேந்திரம் சுபதர்ஷன்.

முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ள தமிழர்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வீடுகளுக்குச் செல்ல முடியாதபடி அவற்றை ராணுவம் தனது பிடியில் வைத்திருக்கிறது. தமிழர் பகுதிகளில் சிங்களர்களை ராணுவமே வீடு எடுத்துக் கொடுத்துத் தங்க வைக்கிறது. தமிழர் பகுதியில் கட்டாய சிங்கள மொழி திணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழர் களும் தமிழ் அதிகாரிகளும் கட்டாயம் சிங்களம் படிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகி றார்கள்.

ஈழத் தமிழர்களுக்காக பரிந்து பேசும் இலங்கை தமிழ் தலைவர் களில் சிலர் தங்களது சுயநலன் களுக்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் மேடைக்குப் பின்னால் இன்னொரு முகத்தையும் மறைத்து வைத்திருக்கிறார்கள். இலங்கைக்கு வெளியில் பிரமாதமாகப் பேசப்படும் இவர் களில் பலரும் அரசாங்கத்துடன் மறைமுக அணுசரணையில் உள்ளனர்.

ஈழத் தமிழ் இளைஞர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு பயங்கரம் போதைப் பொருள் பாவனை. “புலிகள் இருந்தவரைக்கும் போராளிகளும் பொதுமக்களும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஒரு கட்டுப்பாடு இருந்தது.

அப்போது வட இலங்கையில் பனங் கள்ளு, சாராயம், புகையிலை பாவனை இவை மட்டுமே இருந்தன. புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, கஞ்சா, அபின், ஹெராயின் உள் ளிட்ட போதைப் பொருட்கள் வளமையாய் புழக்கத்துக்கு வந்துவிட்டன’’ என்கிறார் தலைமன்னாரைச் சேர்ந்த மரியாம் பிள்ளை ரூபன்.

போதைப் பொருள் புழக்கத் தால் சிறுபிள்ளைகளையும் பெண்க ளையும் துஷ்பிரயோகம் செய்யும் கலாச்சாரச் சீரழிவுச் சம்பவங்களும் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பயங்கரங்களும் அதிகரித்து விட்டன. “விடுதலைப் புலிகள் காலத்தில் தண்டனைகள் கடுமை யாக இருந்ததால் இதுபோன்ற குற்றங்கள் வட இலங்கையில் நிகழ வில்லை’’ என்று தமிழ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலேயே வெளிப்படையாக பேசும் அளவுக்கு தமிழர் பகுதிகளில் குற்றச் செயல்கள் இப்போது மலிந்து விட்டன.

சிங்களர்கள் வசிக்கும் தென் இலங்கையிலிருந்து இந்த போதைப் பொருட்கள் கடத்தப் படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தொழிலில் இருப்பவர் களுக்கு அரசியல் பின்புலமும் இருக்கிறது. இளைஞர்களை போதைப் பொருளுக்கு அடிமை யாக்குவதன் மூலம் அவர்களின் மற்ற சிந்தனைகளை மழுங்கடித்து விடலாம் என கணக்குப் போடுகி றார்கள். அதேசமயம், முந்தைய போராளிகளே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடு வதாக திசைதிருப்புகிறது அரசாங்கம்.

போர் காலத்தில், அரசுக்கு எதிராகவோ அரசின் ஊழல்களை யோ போர் பாதிப்புகளையோ வெளிப்படுத்தும் ஊடகவிய லாளர்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் வெள்ளை வேனை வைத்துக் கடத்தி பிணமாக்கப்பட் டார்கள். இது குறித்தெல்லாம் விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டாலும் கடைசியில் முடிவு தெரியாமலேயே முடித்து வைக்கப் படும்.

இப்போது அதுபோன்ற அச்சுறுத்தல்கள் இல்லை என்றா லும் ஊடகங்கள் இன்னமும் அங்கே சுதந்திரமாக செயல்பட முடிய வில்லை. அரசை விமர்சிக்கும் எந்தவொரு விஷயத்தையும் நேரடி யாகச் சொல்ல முடியாமல் ராமாயணம், மகாபாரதக் கதாபாத் திரங்கள் மூலம் புனைக்கதை சொல்லித்தான் வெளிப்படுத்து கின்றன ஊடகங்கள்.

போர் காலத்தில் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என 2 முக்கியச் சட்டங்களை அமலில் வைத்திருந்தது ராஜபக்ச அரசு. இந்தச் சட்டங்களை பிரயோகிக்கும் அதிகாரம் ராணுவத் திடம் இருந்தது. இப்போது, அவசரகாலச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு அதை பிரயோகிக்கும் அதிகாரம் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தொடர்ந்து தன்னிடமே வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது ராணுவம்.

பிரபாகரனால் உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்படும் தமிழ் தேசியக் கூட்டணிக்குள்ளும் இப்போது கருத்து மோதல்கள். “இது அரசாங்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியாகக்கூட இருக்கலாம்” என்கின்றனர் இலங்கையின் அரசியல் பார்வையாளர்கள்.

கடந்த காலங்களில் மகிந்தவும் அவரது உறவுகள், நண்பர்கள் என சுமார் 150 பேர் இலங்கை அரசின் முக்கிய கேந்திரங்களில் அமர்ந்து கொண்டு அதிகாரம் செலுத்தினர். இவர்களால் ஏகப்பட்ட ஊழல்களும் அரங்கேற்றப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன. மகிந்த மீது ஒரே மூச்சில் நடவடிக்கை எடுத்தால் சிங்களர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் மெதுவாக காய் நகர்த்துகிறார் சிறிசேனா. முந்தைய ஆட்சியின் கோப்புகள் தோண்டப்படு கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஒருசிலரைத் தவிர தங்களுக்காக குரல் கொடுக்கும் மற்ற தலைவர்கள் மீது ஒருவிதமான வெறுப்பில் உள்ளனர் இலங்கை தமிழ் மக்கள்.

வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையேகூட சிறுபிள் ளைத்தனமாக அரசியல் செய்வதாக விமர்சிக்கின்றனர். அரசாங்கத்தின் மீதும் அரசியல் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டபோதும் தங்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையை மட்டும் ஈழத் தமிழினம் இன்னும் இழக்கவில்லை.

தமிழினி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x