Published : 30 May 2018 08:29 AM
Last Updated : 30 May 2018 08:29 AM

உலக மசாலா: கரப்பான் பால்

ரப்பான்பூச்சியின் உடலில் இருந்து சுரக்கும் ஒருவிதத் திரவத்தை ‘கரப்பான் பால்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். பூமியிலேயே மிகவும் சத்து நிறைந்த பால் என்றால் அது கரப்பான் பால்தான். பிற்காலத்தில் கரப்பான் பால் சூப்பர் உணவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கரப்பான் பூச்சிகளில் ஒரு வகை, ‘பசிபிக் பீட்டில் கரப்பான்’. இதைச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ந்தபோது, முட்டைகளை வெளியே இடாமல், உடலுக்குள்ளேயே குஞ்சுகளை வளர்த்து, வெளியே விடுகிறது என்பதை அறிந்தனர். கரப்பானின் உடலுக்குள் சுரக்கும் வெளிர் மஞ்சள் நிறப் பாலை உண்டு வளர்ந்த பிறகே குஞ்சுகள் வெளியே வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளனர். மாட்டின் பாலை விட 3 மடங்கு சத்து கரப்பான் பாலுக்கு இருக்கிறது என்கிறார்கள். “இந்தப் பாலில் புரோட்டீன், அவசியமான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், சர்க்கரை என்று ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால்தான் இந்தக் கரப்பான்பூச்சியின் குஞ்சுகள், மற்ற கரப்பான் குஞ்சுகளைவிட மிக வேகமாக வளர்கின்றன. இதில் சத்து அதிகம் இருந்தாலும் மனிதர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று சொல்ல முடியாது. 100 கிராம் கரப்பான் பாலைப் பெறுவதற்கு ஆயிரம் கரப்பான்பூச்சிகள் தேவைப்படும். பண்ணைகளில் கரப்பான்களை வளர்க்க முடியுமா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதிக அளவில் கரப்பான் பால் கிடைத்தால் காபியில் கலக்கலாம், ஐஸ்க்ரீம் செய்யலாம். அதற்கு முன்பு கரப்பான் பால் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மையளிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்” என்கிறார் விஞ்ஞானி லியோனார்ட் சாவாஸ்.

கரப்பான் பாலையும் விட்டுவைப்பதில்லை!

சீ

னாவைச் சேர்ந்த வாங், ஜிங்ஸோங் நகரிலுள்ள ஒரு செல்லப் பிராணிகள் கடையில் அழகான ஜப்பான் ஸ்பிட்ஸ் நாய்க் குட்டியை வாங்கினார். மூன்று மாதங்கள் வரை வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் குட்டியைக் கவனித்துக்கொண்டார். நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது மற்ற நாய்கள், இதைக் கண்டு பயந்து ஒதுங்கின. அப்போதும் வாங்குக்குச் சந்தேகம் வரவில்லை. ஒரு மாதம் கழித்து இது நாய் போலவே இல்லை, வால் எல்லாம் நரி போல இருக்கிறது என்று சிலர் சந்தேகம் கிளப்பினார்கள். அப்போதுதான் நாய் ஒரு முறை கூடக் குரைத்தது இல்லை என்பதையும் நாய்களுக்கான உணவுகளை அது சரியாகச் சாப்பிடுவதில்லை என்பதையும் உணர்ந்தார். “டையுவான் விலங்குகள் பூங்காவுக்கு நாயை அழைத்துச் சென்றேன். அங்கே இருந்த ஆராய்ச்சியாளர்கள், இது நாயல்ல, நரி என்று உறுதியாகச் சொன்னார்கள். ஆனால் அது இதுவரை வித்தியாசமாக என்னிடம் நடந்துகொண்டதில்லை. என்னதான் வீட்டில் வளர்த்தாலும் நரி, நாயாக முடியாது. இன்னும் சில மாதங்களில் இது முழு வளர்ச்சியடைந்த நரியாக மாறிவிடும் என்றார்கள். அந்தப் பூங்காவிலேயே என்னுடைய செல்லப் பிராணியைக் கொடுத்துவிட்டேன். நான் எப்போது வேண்டுமானாலும் என் செல்ல நரியை வந்து பார்க்கலாம் என்று பூங்கா அனுமதி கொடுத்திருக்கிறது. நரிக்குச் செய்யப்படும் செலவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் வாங்.

நாய் வாங்கப் போய், நரி வாங்கி வந்த கதை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x