Published : 24 May 2018 08:52 AM
Last Updated : 24 May 2018 08:52 AM
அணு ஆயுத சோதனை கூடம் பிரிக்கப்படுவதைப் பார்வையிட சர்வதேச நிருபர்களுக்கு வடகொரியா அனுமதி அளித்தது. கடைசி நேரத்தில் தென் கொரிய நிருபர் களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதை அந்த நாடு வரவேற்றுள்ளது.
தென் கொரியாவின் முயற்சியால், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையே ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தென் கொரியா - அமெரிக்கா போர்ப் பயிற்சி கொரிய தீபகற்பத்தில் தொடங்கியது. இதற்கு கிம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்று எச்சரித்தார்.
அத்துடன் அணு ஆயுதங்களை, சோதனை கூடங்களை வடகொரியா தானாகவே அழிக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியதற்கும் கிம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
எனினும், அணு ஆயுத சோதனையை தொடர்ந்து நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துள்ளோம். அதை உறுதிப்படுத்த பங்கி-ரி பகுதியில் உள்ள அணு ஆயுத சோதனை கூடத்தைப் பிரித்து வருகிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. மேலும், அந்த அணு ஆயுத சோதனை கூடம் பிரிக்கப்படுவதைப் பார்வையிட சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த நிருபர்கள் பலருக்கு வடகொரியா அனுமதி அளித்தது. ஆனால் தென் கொரிய நிருபர்களுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. அதனால் பெய்ஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் செல்லவிருந்த தென் கொரிய நிருபர்களுக்கு விசா வழங்கப்படவில்லை. எனவே, அவர்கள் தென் கொரியா திரும்பினர்.
மற்ற நாடுகளைச் சேர்ந்த நிருபர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வடகொரியாவின் வொன்சன் பகுதிக்கு விமானத்தில் வந்திறங்கினர். அங்கிருந்து பங்கி-ரி பகுதி 200 கி.மீ. தூரத்தில் உள்ளது. தற்போது வானிலை சரியில்லாததால் புதன் (நேற்று) அல்லது இன்று நிருபர்களை அந்தப் பகுதிக்கு அழைத்து செல்வோம் என்று வடகொரியா கூறியுள்ளது.
இந்நிலையில் கடைசி நிமிடத்தில் 8 தென் கொரிய நிருபர்கள் அணு ஆயுத சோதனை கூடம் பிரிக்கப்படுவதை நேரில் பார்வையிட வடகொரியா அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அவர்களும் வொன்சன் பகுதிக்கு நேற்று சென்றடைந்தனர். வடகொரியாவின் இந்த நடவடிக்கையை தென் கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT