Published : 23 May 2018 12:28 PM
Last Updated : 23 May 2018 12:28 PM
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள், அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. பதற்றம் நீடிப்பதால் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போராட்டங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் லண்டனில் வசிக்கும் தமிழர்களும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குனர் அணில் அகர்வாலுக்கு லண்டனிலும் வீடு உள்ளது.
அந்த வீட்டை முற்றுகையிட்ட லண்டன் வாழ் தமிழர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி முழக்கங்களை எழுப்பினர். துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். லண்டன் நகரில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை மிஸ் பண்ணாதீங்க:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT