Last Updated : 22 May, 2018 12:43 PM

 

Published : 22 May 2018 12:43 PM
Last Updated : 22 May 2018 12:43 PM

துருக்கி ராணுவ புரட்சி: 104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

துருக்கியில் 2016 -ஆம் ஆண்டு அதிபர் எர்டோகனுக்கு எதிராக நடத்தப்பட்ட ராணுவ புரட்சியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் 104 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ராணுவ புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை துருக்கி அரசு வெளியிடாமல் உள்ளது.

துருக்கி ராணுவ புரட்சி

துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது.  அவர் பத்திரிகை சுதந்திரம், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன.  ராணுவத்தின் அதிகாரங்களையும் படிப்படியாக குறைத்து வந்தார். இதன் காரணமாக ராணுவத்தில் அவருக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவத்தின் ஒரு பிரிவினர் நள்ளிரவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களை ‘பீஸ் கவுன்சில்’ வீரர்கள் என்று அறிவித்துக் கொண்டனர்.

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு சென்ற புரட்சிப் படை வீரர்கள் தலைமைத் தளபதி ஜெனரல் ஹுலுசி ஆகாரை சிறைபிடித்தனர்.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அறிந்த அதிபர் எர்டோகன் நள்ளிரவில் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் பேசினார். பொது மக்கள் யாரும் வீட்டில் முடங்க வேண்டாம். சாலை, தெருக்களில் இறங்கி, புரட்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷ மாக போரிடுங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஆளும் ஏ.கே. கட்சி மட்டுமன்றி எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலையில் இறங்கி ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்காராவின் சாலைகளில் ரோந்து சுற்றிய பீரங்கி வாகனங்களை பொதுமக்கள் நிராயுதபாணியாக மறித்து சிறைபிடித்தனர். அப்போது புரட்சிப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பொது மக்களில் பலர் உயிரிழந்தனர்.

ஆனால் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் ராணுவ வீரர்களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. பல இடங்களில் பீரங்கிகளின் மீது ஏறிய பொதுமக்கள், ராணுவ வீரர்களை அடித்து நொறுக்கினர்.

புரட்சிப் படை வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடைபெற்றது.

ராணுவ புரட்சியை மக்கள் தோற்கடித்தனர். இதில் புரட்சிப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் உயிரிழந்தனர். அதிபர் எர்டோ கனின் ஆதரவாளர்கள் 165 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 போலீஸாரும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் அடங்குவர். ஒட்டு மொத்தமாக 265 பேர் பலியாயினர்.

இருதரப்பிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக 2,800-க்கும் மேற்பட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x