Published : 20 May 2018 08:55 AM
Last Updated : 20 May 2018 08:55 AM
மலேசியா முன்னாள் பிரதமரிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பொது விசாரணை நடத்த அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் அண்மையில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தன. மகாதிர் முகமது, புதிய பிரதமராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோலாலம்பூரின் பெவிலியோன் அடுக்குமாடி குடியிருப்பில் ரசாக்கிற்கு சொந்தமான 2 வீடுகளில் போலீஸார் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தி 100 கிலோ தங்க கட்டிகள், ரூ.171 கோடி ரொக்க பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வரும் 22-ம் தேதி ரசாக் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் நஜீப் ரசாக்கிடம் பொது விசாரணை நடத்துவதற்கு அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறோம். ஆனால் இந்த விசாரணை ரகசியமாக நடைபெறவேண்டும். பொது விசாரணை நடத்த அவசரம் காட்டக் கூடாது. எங்கள் வீட்டில் சோதனை நடைபெற்ற போது சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் பெருமளவில் பரவின. எனவே விசாரணை ரகசியமாக நடக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். - ஏபி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT