Published : 19 May 2018 12:40 PM
Last Updated : 19 May 2018 12:40 PM

டெக்சாஸில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 10 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய அப்பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவனை போலீஸார் கைது செய்து உள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், ‘‘டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகருக்கு அருகே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது  சாண்டா ஃபே ஹை ஸ்கூல் பள்ளி. இப்பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவர் ஒருவர் வகுப்பு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி அலாரம் ஒலி எழும்பி பள்ளியின் பிற மாணவர்களை எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து பல மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 17 வயதான மாணவர் டிமிட்ரியஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ’கொலை செய்ய பிறந்தவன்’ என்ற வாசகம் அடங்கிய டீ ஷர்ட்டை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

முன்னதாக புளோரிடா மாகாணத்தில் உள்ள ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனைக்கு கட்டுபாடுகள் விதிக்க கூறி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x