Last Updated : 10 May, 2018 12:10 PM

 

Published : 10 May 2018 12:10 PM
Last Updated : 10 May 2018 12:10 PM

சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: உலகின் வயதான பிரதமர் மகாதிர் முகமது

மலேசியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூத்த தலைவர் மகாதிர் முகமது(வயது92) தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மகாதிர் முகமது பிரதமராக பதவி ஏற்றால், உலகின் மிக வயதான பிரதமர் எனும் பெருமையைப் பெறுவார். இதன் மூலம் மலேசியாவில் சுதந்திரத்துக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் ஆட்சியில் இருந்த பாரிஸன் நேஷனல் கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 1981-ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பிரதமராக முகமது மகாதிர் இருந்துள்ளார். அதன்பின் இப்போது அவரின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால், மீண்டும் பிரதமராக மகாதிர் பொறுப்பேற்க உள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்துக்குக் கடந்த செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெற்றது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் 69 சதவீதம் வாக்குப்பதிவு இருந்தது.

ஆளும் கட்சியான பிரதமர் நஜீப் ரசாக்கின் பி.என்.கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது தலைமையிலான மலேசிய ஐக்கிய உள்நாட்டுக் கட்சி(எம்யுஐபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்குகள் பதிவானநிலையில், நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணியை விட மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மகாதிர் முகமது தலைமையிலான பகாதான் ஹரப்பான் கூட்டணி 121 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஆட்சி அமைக்க 112 இடங்கள் இருத்தலே போதுமானது குறிப்பிடத்தக்கது. ரசாக் தலைமையிலான பிஎன் கட்சி 79 இடங்களில் மட்டுமே வென்றது. சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்குப் பின், மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மலேசிய அரசியலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு அரசியல் குருவாக இருந்தவர் மகாதிர் முகமது. இப்போது நடந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு சிஷ்யனை வென்றுள்ளார் குரு மகாதிர் முகம்மது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து மலேசியாவில் உள்ள மகாதிர் முகமது கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இனிப்புகளைப் பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கோலாலம்பூர் நகரில் உள்ள மகாதிர் கட்சியின் தலைமை அலுவலகம் முந் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

இந்த ஆட்சி மாற்றும் குறித்து வயதான மருத்துவர் சுவா செல்வன் கூறுகையில், ‘மலேசியாவில் நடந்துள்ள ஆட்சி மாற்றம், சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும். எதிர்காலத்தில் சிறந்த அரசு, நேர்மையான ஆட்சி, மக்களின் சுதந்திரம் காக்கப்படும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்தார்.

தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் ?

கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை மலேசியாவில் பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக். இவரின் பதவிக்காலத்தில் 1 மலேசிய மேம்பாட்டு பெர்ஹாட் என்ற நிதி நிறுவன முறைகேட்டில் அரசு சிக்கி மிகப்பெரிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியது. இந்தக் குற்றச்சாட்டை ரசாக் கடுமையாக மறுத்தார். இந்தக் குற்றச்சாட்டு தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், ஜிஎஸ்டி வரியை நாடுமுழுவதும் அமல்படுத்தி, கடினமான வரிவிதிப்புகளை ரசாக் கொண்டுவந்தார். இதனால், மலேசியாவில் உள்ள மக்களின் வாழ்வதற்கான செலவு கடுமையாக அதிகரித்தது. இதனால், மலேசிய கிராமங்களில் வாழும் மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினார்கள். இவை அனைத்தும் தேர்தலில் ரசாக் கட்சி தோல்வி அடையக் காரணமாக அமைந்துவிட்டது.

பழிவாங்கமாட்டோம்

தேர்தல் வெற்றிக்குப் பின் மகாதிர் முகமது கூறுகையில், ‘நாங்கள் எந்தவகையிலும் இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சியை பழிவாங்கமாட்டோம். சட்டத்தின் ஆட்சியை நாட்டில் செயல்படுத்துவோம்’ எனத் தெரிவித்தார். மலேசியாவின் பிரதமராக மகாதிர் முகமது பிரதமராக பொறுப்பேற்றால் உலகின் வயதான பிரதமர் எனும் பெருமையைப் பெறுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x