Published : 01 May 2018 09:16 AM
Last Updated : 01 May 2018 09:16 AM
க
டந்த வெள்ளி அன்று 28 வயது ஆம்பர் பிலிப்ஸ் அமெரிக்காவின் வட கரோலினாவிலிருந்து வாஷிங்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தார். இவருக்கு அருகில் ஓர் அமெரிக்கப் பெண் அமர்ந்திருந்தார். 45 நிமிடப் பயணத்திலும் வலது கையை மேலே தூக்கி வைத்துக்கொண்டு பிலிப்ஸ் மீது பட்டுவிடாமல் அமர்ந்திருந்தார். அடிக்கடி ஏதோ திட்டிக்கொண்டே இருந்தார். விமானப் பணிப் பெண்ணை அழைத்து, பிலிப்ஸ் மீது புகார் கொடுத்தார்.
“அந்தப் பெண் என்னை ஒரு மனிதராகக் கூடப் பார்க்கவில்லை. கறுப்பு குண்டுப் பெண் என்று எனக்கு முன்பாகவே புகார் கொடுத்தார். அவரது செய்கைகளை நான் என் மொபைல்போனில் வீடியோ எடுத்தேன். விமானம் இறங்கியவுடன் எனக்கு முன்பே அந்தப் பெண் வேகமாகச் சென்றுவிட்டார். நான் வெளியே வந்தபோது காவலர்கள் எனக்காகக் காத்திருந்தனர். என் உருவத்தைக் கண்டதும் அந்தப் புகாருக்கு உரியவர் நான் என்று முடிவு செய்துவிட்டனர். விசாரிக்க வேண்டும் என்றனர். நான்தான் புகார் அளிக்க வேண்டும். என் மீது என்ன புகார் என்று கேட்டேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. என்னுடைய அடையாள அட்டையைக் கேட்டனர். கொடுத்தேன். பொதுவெளி யில் எப்படி நடக்க வேண்டும் என்று கூடத் தெரியாதா என்று கேட்டவுடன், நான் எடுத்த வீடியோவைக் காட்டினேன். உடனே என்னுடன் பயணித்த மற்ற பெண்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்துவிட்டு, உன் புகாரை என்னால் விசாரிக்க இயலாது என்று கூறி அனுப்பிவிட்டார் அந்த அமெரிக்கக் காவலர். இந்த ஆதாரம் மட்டும் இல்லையென்றால் நான் இந்நேரம் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டிருப்பேன். எவ்வளவு காலம் ஆனாலும் அமெரிக்கர்களுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. சிலர் இவ்வளவு அநாகரிகமாகவும் நடந்துகொள்கிறார்கள். சொந்த நாட்டிலேயே மிக மோசமாக நடத்தப்படுகிறோம் என்பது தாங்க முடியாத வலியைத் தருகிறது. வெளியே வந்தவுடன் சமூக வலைதளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்தேன். அதைப் பார்த்த விமான நிறுவனம், என்னை அவர்களது உயர் அதிகாரியைச் சந்திக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறது” என்கிறார் பிலிப்ஸ்.
என்றுதான் மறையுமோ இந்த மனித துவேஷம்..
இ
ங்கிலாந்தைச் சேர்ந்த மால்கம் ட்ரோப், பள்ளியில் பணியாற்றி வருகிறார். பழங்கால அனலாக் கடிகாரங்களைத் தற்போதுள்ள மாணவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், அதற்குப் பதிலாக டிஜிடல் கடிகாரங்களைப் பள்ளிகளில் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். “குழந்தைகளின் வாழ்க்கையில் போன், டேப்லட், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவர்கள்களால் தேர்வு அறையில் வைக்கப்பட்டிருக்கும் அனலாக் கடிகாரங்களில் நேரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்காமல், டிஜிட்டல் கடிகாரங்களை வைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதைப் பார்த்துப் பலரும் கடிகாரங்களை மாற்றச்சொல்லிக் கேட்டு வருகிறார்கள். விரைவில் மாற்றம் வரும்” என்கிறார் மால்கம் ட்ரோப்.
காலத்துக்கு ஏற்றவாறு மாற வேண்டியதுதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT