Published : 26 Apr 2018 08:49 AM
Last Updated : 26 Apr 2018 08:49 AM
இந்தோனேசியாவில் எண்ணெய் கிணறு ஒன்று நேற்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடமுனையில் ஏஸ் மாகாணம் உள்ளது. எண்ணெய் வளம் மிகுந்த இந்த மாகாணத்தில் உள்ளூர் மக்களே அரசு அனுமதியின்றி ஆழ்குழாய் மூலம் எண்ணெய் எடுப்பதுண்டு. இந்நிலையில் இங்குள்ள பசிபுதி என்ற கிராமத்தில் எண்ணெய் கிணறு தோண்டும்போது, சுமார் 250 மீட்டர் ஆழத்திலிருந்து எண்ணெய் பீறிட்டு வெளியே வரத் தொடங்கியது.
இதையடுத்து அருகில் வசிக்கும் மக்கள் எண்ணெய் சேகரித்துக் கொண்டிருந்தபோது, எண்ணெய் கிணற்றில் தீப்பற்றியது. இதையடுத்து சுமார் 230 அடி உயரத்துக்கு தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அடுத்தடுத்து வெடி விபத்தும் ஏற்பட்டது.
இதில் அருகில் இருந்த வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. இதில் விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதுபற்றி பேரிடர் மேலாண்மை முகமை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தீயை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. கிணற்றுக்கு அருகில் பலர் உடல் கருகி இறந்து கிடக்க வாய்ப்புள்ளது” என்றார். - ஏஎப்பி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT