Published : 18 Mar 2018 01:32 PM
Last Updated : 18 Mar 2018 01:32 PM
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 2-வது தலைவரான லீ கெக்கியாங் 2-வது முறையாக பிரதமராக இன்று தேர்வு செய்யப்பட்டார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.
சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜிங்பிங்கை சீன நாடாளுமன்றம் ஏற்கனவே தேர்வு செய்துள்ள நிலையில், அடுத்ததாக, பிரதமராக லீ கெக்கியாங்கையும் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த நாடாளுமன்றத் கூட்டத்தில், 62வயதாகும் லீ கெக்கியாங், அதிபர் ஜி ஜின்பிங் சார்பில் முன்மொழியப்பட்டு 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் 2,964 வாக்குகள் கிடைத்தன.
சீனாவின் பிரதமராக லீ கெக்கியாங் 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், அதிகாரம் படைத்த தலைவராக சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்தான் வலம் வருவார். ஒட்டுமொத்த அதிகாரமும் ஜின்பிங்கிடம் குவிந்திருப்பதால், ரப்பர்ஸ்டாம்ப்பாக மட்டுமே லீ கெக்கியாங் இருப்பார்.
சீனாவின் சட்டங்களின்படி பிரதமராகவோ, அதிபராகவோ ஒருவர் 5ஆண்டுகள் மட்டுமே செயல்பட முடியும். அதன்பின் தேர்தல் நடத்தி புதியவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷி ஜின்பிங், இரண்டு முறைக்கு மேல் ஆயுள் முழுவதும் அதிபர் பதவி வகிக்கலாம் என்ற வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
இதனால் ஜி ஜின்பிங், 2023க்கு பின்னும் தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர முடியும். அவர் 20 லட்சம் வீரர்கள் கொண்ட வலிமையான ராணுவத்தின் ஒட்டுமொத்த தலைமை பதவியான மத்திய ராணுவ ஆணைய தலைவராகவும் இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அதிபர் ஜின்பிங்கின் தீவிர விசுவாசியான வாங் குவாசியான் துணை அதிபராகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட ஊழல் தடுப்பு தேசிய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக யாங் ஜியாடுவும், தேசிய ராணுவ இயக்கத்தினஅ துணைத்தலைவராக ஜூ குயிலியாங், ஹாங் யூக்ஸியா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT