Published : 16 Mar 2018 08:51 AM
Last Updated : 16 Mar 2018 08:51 AM

உலக மசாலா: நரிக்கு சைவ உணவு

ஸ்

பெயினைச் சேர்ந்த சோனியா சாய் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருடைய சேனலில் வீகன் உணவுப் பழக்கமான தாவர உணவுகளையே உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். சமீபத்தில் இவருடைய செல்லப் பிராணியான ஜுமாஞ்சி என்று பெயரிடப்பட்டுள்ள ஃபென்னக் நரியின் படங்கள் இணையதளத்தில் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தன. கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறார் சோனியா. ஃபென்னக் நரி, தாவரங்கள், விலங்குகள், முட்டை, ஊர்வன, பூச்சிகள் என்று பல வகையான உணவைச் சாப்பிடுகின்றன. ஆனால் ஜுமாஞ்சிக்குத் தாவர உணவை மட்டுமே வழங்கி வந்திருக்கிறார் சோனியா. 3 ஆண்டுகளாக இந்த உணவைச் சாப்பிட்டதால் நரியின் எடை குறைந்துவிட்டது. பார்வையும் பாதி குறைந்துவிட்டது. படங்களைப் பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் உடனடியாக வீகன் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும், இல்லையென்றால் விலங்குகள் காப்பகத்தில் ஜுமாஞ்சியை ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர். “நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம், சோனியா கண்டுகொள்ளவே இல்லை. செல்லப் பிராணி என்ற பெயரில் ஒரு உயிரை வதைத்துக்கொண்டிருக்கிறார். இயற்கையாக ஓர் உயிரினத்துக்கு என்ன உணவுப் பழக்கம் இருக்கிறதோ அதைத்தான் அது பின்பற்ற வேண்டும். ஃபென்னக் நரியை வீட்டில் வளர்ப்பவர்கள் இறைச்சி, நாய், பூனை உணவுடன் பூச்சி, புழுக்களையும் சேர்த்து கலவையாக வழங்க வேண்டும்” என்கிறார் ஆலிஸ் நட்யானா மூரே. “வீகன் உணவை யார் எடுத்துக்கொண்டாலும் உடல் மெலிந்துதான் காணப்படுவார்கள். என்னுடைய ஜுமாஞ்சி உடல் மெலிந்து காணப்பட்டாலும் ஆரோக்கியமாக இருக்கிறது. ரத்தப் பரிசோதனையிலும் பிரச்சினை இல்லை. எனினும் ஜுமாஞ்சி குறித்து உங்களது அக்கறைக்கு நன்றி” என்று பதிலளித்திருக்கிறார் சோனியா.

நரிக்கு வீகன் உணவு என்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்…

ங்கிலாந்தைச் சேர்ந்த ஏமி க்ரீன், வீட்டிலேயே பிரசவம் செய்துகொள்ள முடிவு செய்தார். இவரது கணவர், குடும்பத்தினர், நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் மருத்துவமனையில் பிரசவிப்பதை மறுத்துவிட்டார். ஏமியின் விருப்பம்போலவே வீட்டில் லூனா என்ற பெண் குழந்தை பிறந்தது. திடீரென்று குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே ஏமியின் கணவர் மருத்துவமனைக்கு தாயையும் குழந்தையையும் அழைத்துச் சென்றார். ஆனால் குழந்தை இறந்துவிட்டது. “எல்லோரும் சொன்னதை நான் கேட்கவில்லை. மருத்துவமனையில் பிறந்திருந்தால் எங்கள் மகள் உயிருடன் இருந்திருப்பாள். அறியாமையில் செய்த இந்தத் தாயின் தவறை மன்னித்துவிடு மகளே… அப்பாவுக்கான கனவுகளுடன் வாழ்ந்த ரியான் என்னை மன்னிப்பாரா என்று தெரியவில்லை. என்னைப்போல் யாரும் இப்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரியான் அறக்கட்டளை ஆரம்பித்திருக்கிறார். மருத்துவமனைக்குச் செல்ல முடியாத பெண்களின் பிரசவத்துக்கு இந்த அறக்கட்டளை பணம் கொடுக்கும்” என்கிறார் ஏமி க்ரீன்.

இந்தக் காலத்திலும் இப்படியா யோசிப்பார்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x