Published : 09 Mar 2018 09:38 AM
Last Updated : 09 Mar 2018 09:38 AM
எ
ல் ரே மேக்னம் என்ற இளம் அரேபியக் குதிரையின் முகம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. மிகப் பெரிய தட்டையான மூக்குத் துவாரங்கள், அகலமான கண்கள் என்று பார்ப்பதற்கு கார்ட்டூன் குதிரை போன்றே தோற்றமளிக்கிறது. வாஷிங்டனில் உள்ள ஓரியன் பண்ணை இந்த வித்தியாசமான குதிரையை உருவாக்கியிருக்கிறது. 9 மாதங்களான மேக்னம் குதிரையின் படங்களும் வீடியோக்களும் வெளிவந்தவுடன் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்தக் குதிரை உருவாக்கத்துக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். “செயற்கையாக ஓர் உயிரினத்தை உருவாக்குவது இயற்கைக்கு விரோதமானது. இது அந்தக் குதிரையின் உடல் நலத்துக்கும் ஆபத்து. மனிதர்களும் நாய்களும் வாய் மூலமும் சுவாசிக்க முடியும். ஆனால் குதிரைகளால் மூக்கின் மூலம் மட்டுமே சுவாசிக்க இயலும். அதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இனப்பெருக்கமும் பாதிக்கப்படலாம். உங்கள் கற்பனை வளத்துக்கு ஏற்றபடி வித்தியாசமான உருவங்களை, கார்ட்டூனில் கொண்டு வந்து கொள்ளுங்கள். உயிருடன் இருக்கும் ஒரு குதிரையிடம் காட்டாதீர்கள்” என்கிறார் கால்நடை மருத்துவத் துறை நிபுணர் அடெல் வாட்டர்ஸ்.
மனிதன் எல்லை மீறலாமா?
கோ
லாலம்பூர் வணிக வளாகத்தில் இயங்கிவரும் ஸ்விட்ச் நிறுவனத்தில், ஆப்பிள் சாதனங்கள் தள்ளுபடி விலையில் தருவதாக அறிவிக்கப்பட்டது. ஐபோன், மேக்புக், ஐமேக் என்று 200 சாதனங்களுக்கு மட்டும் கணிசமாக விலை குறைக்கப்படுவதாக அறிந்தவுடன், மக்கள் ஆர்வத்துடன் குவிந்துவிட்டார்கள். “புதிய மாடல்களை வாங்க, பழைய மாடல்களை விற்றுவிட தள்ளுபடியை அறிவித்தோம். மொத்தமே 200 சாதனங்களுக்குத்தான் தள்ளுபடி. ஆனால் 11 ஆயிரம் பேர் வரிசையில் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டது. இந்த வணிக வளாகத்தின் பல தளங்களிலும் மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். தள்ளுபடியில் சாதனங்கள் விற்பனையாகிவிடும் என்று மகிழ்ச்சியாக நினைத்த எங்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் முதல் நாள் இரவே வந்து வரிசையில் நின்றுவிட்டனர். மறுநாள் காலை கடை திறக்க வந்த எங்களுக்கு பேரதிர்ச்சி. கடை ஊழியர்கள் கடைக்கு முன் நின்றிருந்தவர்களை ஒழுங்குபடுத்தி, தள்ளுபடி கூப்பன்களை வழங்கினார்கள். மிகவும் சிரமப்பட்டு கடையைத் திறக்க முயன்றோம். ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டமாக உள்ளே வர முயன்றார்கள். ஒரு பெரிய விபத்து நிகழப் போவதை அறிந்துகொண்ட நாங்கள், வேறு வழியின்றி கடையை மூடினோம். தள்ளுபடி விற்பனை கிடையாது என்று அறிவித்தோம். உறங்காமல், சாப்பிடாமல் மணிக்கணக்கில் காத்திருந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டோம். 11 ஆயிரம் பேரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இந்த அனுபவத்தால் எதிர்காலத்தில் தள்ளுபடியை யோசிக்கக்கூட மாட்டோம் என்று தோன்றுகிறது” என்கிறார் ஸ்விட்ச் கடை மேலாளர்.
தள்ளுபடி என்றால் இப்படியா குவிவார்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT