Published : 20 Feb 2018 08:47 AM
Last Updated : 20 Feb 2018 08:47 AM

உலக மசாலா: நவீன ராபின்ஹூட்

பி

ரேசிலின் ரியோடி ஜெனிரோவில் வசிக்கும் தாமஸ் வியரா கோம்ஸ் மிக மோசமான குற்றவாளியாக அறியப்படுகிறார். சமீபத்தில் இவர் செய்த ஒரு காரியம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பிரேசிலில் கடந்த சில மாதங்களாக மஞ்சள் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சகம் லட்சக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி போட்டுவருகிறது. பல இடங்களில் நோய்த் தடுப்பு மையங்கள் செயல்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எல்லோரும் உற்றுநோக்கக்கூடிய பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. வழக்கம்போல் ஏழைகள் வசிக்கும் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. தாமஸ் வசிக்கும் பகுதியில் ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் களுக்கு அரசாங்கத்தின் மருத்துவ உதவி கிடைக்கவில்லை. ஜனவரி 27 அன்று இரவு தாமஸ் தன்னுடைய ஆட்களுடன் கிளம்பினார். ஒரு மருத்துவமனையில் இருந்த மருந்துகளையும் இரண்டு மருத்துவ உதவியாளர்களையும் கடத்தினார். அவர் வசித்த பகுதி யில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கெல்லாம் இருவரை வைத்து, போட வைத்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் இருவரையும் மீண்டும் மருத்துவமனையில் பத்திரமாகக் கொண்டுவந்து விட்டுவிட்டார். காவல் துறை இந்தக் கடத்தலைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சகம், விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. கடத்தல் செய்தி சமூகவலைதளங்களில் பரவி, பாராட்டுப் பெற்றுவருகிறது. முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர், “இது மக்கள் பணி என்பதால் அவரைப் பாராட்ட வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். தாமஸைப் பிடிப்பதற்கு உதவி செய்கிறவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நவீன ராபின்ஹூட்..!

ங்கிலாந்தைச் சேர்ந்த 45 வயது கார்ல் பொல்லார்ட், தன்னுடைய 14 வயது மகள் ஸ்டெபானியுடன் மெக்லஸ்ஃபீல்ட் நகருக்கு வந்தார். டிராவலாட்ஜ் என்ற விடுதியில் தங்கினார். அவர் அறைக்கு சென்ற 10 நிமிடங்களில் காவலர்கள் வந்தனர். ஸ்டெபானி யார், எதற்காக வந்தீர்கள் என்று கேள்விகளால் துளைத்தெடுத்தனர். “என் அம்மா மிக மோசமான நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எவ்வளவு காலம் அவரால் வாழ முடியும் என்று தெரியவில்லை. சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பு பேத்தியைக் காண விரும்பினார். அம்மாவுடன் மருத்துவமனையில் என் மனைவி தங்கியிருக்கிறார். நானும் மகளும் மட்டும் விடுதியில் தங்க முடிவெடுத்தோம். ஆனால் நான் குழந்தைகளிடம் உறவு கொள்பவன் என்று தவறாக இந்த விடுதியைச் சேர்ந்தவர்கள் கருதி, காவல் துறைக்குத் தகவல் கொடுத்துவிட்டனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு என் மகளுடன்தான் வந்திருக்கிறேன் என்பதை உறுதி செய்தனர். அம்மாவின் நிலையை நினைத்து மிகவும் கலங்கிப்போய் வந்திருக்கிறேன். இங்கே காவலர்களின் விசாரணை என் மனநிலையை மோசமாக்கிவிட்டது. குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மகளின் முன்னால் அப்பாவை விசாரணை செய்ததை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கடைசியில் விடுதி நிர்வாகம் மன்னிப்புக் கேட்டு, கட்டணம் இன்றி தங்கச் சொல்லிவிட்டது. இதனால் எல்லாம் என் மன வலியைக் குறைக்க முடியாது” என்கிறார் பொல்லார்ட்.

ஒரு தந்தையால் எப்படி இதைத் தாங்க முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x