Published : 17 Feb 2018 08:07 AM
Last Updated : 17 Feb 2018 08:07 AM

18 லட்சம் பேரின் குடியுரிமை கேள்விக்குறியானது: அமெரிக்காவில் மசோதா தோல்வி

அமெரிக்காவில் சட்டவிரோத மாக வசிக்கும் சுமார் 18 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா அந்த நாட்டு செனட் அவையில் தோல்வியடைந்தது. இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

அமெரிக்காவில் லட்சக்கணக் கான வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் குழந்தையாக இருக்கும்போது பெற்றோரால் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தற்காலிக தங்கும் உரிமை வழங்கினார். இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர்.

அவர்களுக்கான தற்காலிக தங்கும் உரிமை மார்ச் 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். இதற்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஆளும் குடியரசு கட்சித் தலைவர்களுக்கும் ஜனநாயக கட்சித் தலைவர்களுக்கும் இடையே அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் 18 லட்சம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் உறுதியளித்தார்.

அதற்கு பிரதிபலனாக மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கு நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்திருந்தார்.

இந்த உடன்பாட்டின்படி, 18 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க செனட் அவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் குடியரசு கட்சி ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா தோல்வி அடைந்தது.

மசோதாவுக்கு ஆதரவாக 39 பேரும் எதிராக 60 பேரும் வாக்களித்தனர். 100 பேர் கொண்ட செனட் அவையில் ஜனநாயக கட்சிக்கு 46 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த 14 பேரும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதுகுறித்து ஜனநாயக கட்சி செனட் சபை தலைவர் மிட் மெக்கெனால் கூறியபோது, “நல்ல மசோதாவை மட்டுமே செனட் அவையில் நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சியின் கருத்தை கேட்டறியாமல் பாதகமான மசோதாவை குடியரசு கட்சி தாக்கல் செய்துள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான தங்கும் உரிமை மார்ச் 5-ம் தேதி நிறைவடையும் நிலையில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x