Last Updated : 13 Feb, 2018 01:46 PM

 

Published : 13 Feb 2018 01:46 PM
Last Updated : 13 Feb 2018 01:46 PM

ட்ரம்ப் மகனுக்கு பார்சலில் வந்த வெள்ளை நிறப்பொடி: முகர்ந்து பார்த்து மயங்கிய மருமகள் வெனிசா

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் ஜூனியர் ட்ரம்ப் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலில் இருந்த வெள்ளை நிறப்பொடியை முகர்ந்து பார்த்த அவரது மருமகள் வெனிசா மயங்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மூத்த மகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப். தந்தை ட்ரம்புக்கு உதவியாக அரசியல் பணிகளை ஒருங்கிணைத்து வரும், ஜூனியர் ட்ரம்ப், தனது தந்தையின் செய்தித்தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். தனது மனைவி வெனிசாவுடன் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஜூனியர் ட்ரம்ப் வீட்டு முகவரிக்கு நேற்று மர்ம பார்சல் ஒன்று வந்துள்ளது. அதை வாங்கி, வெனிசா பிரித்து பார்த்துள்ளார். அப்போது பீதியால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டில் இருந்த வெனிசாவின் தாய் உள்ளிட்ட வேறு சிலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, வெனிசா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோலவே பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. மனைவி வெனிசா நலமுடன் இருப்பதாக ட்ரம்ப் ஜூனியர் ட்வீட் செய்துள்ளார்.

ட்ரம்ப் மகன் வீட்டிற்கு வந்த மர்ம பார்சலில் இருந்த வெள்ளை நிறப்பொடி குறித்து தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதை அனுப்பியவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.   இந்த தகவல் பரவியதும் நியூயார்க் நகரில் பீதி ஏற்பட்டது. இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு முக்கிய நபர்களுக்கு ஆந்த்ராக்ஸ் பொடி அடங்கிய பார்சல்கள் வந்தன. ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், எம்.பி.க்கள் என முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்குடன் இந்த பார்சல்கள் அனுப்பப்பட்டன. இதபற்றி தகவல் பரவியதும் பார்சல்கள் அனுப்படுவது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x