Published : 22 Jan 2018 11:02 AM
Last Updated : 22 Jan 2018 11:02 AM

இந்தியாவில் 73 சதவீத சொத்து 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் இருப்பதாக ஆய்வில் தகவல்

 

இந்தியாவில், 2017-ம் ஆண்டு ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் கையில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியின் பயன் ஒரு சிலரை மட்டும் சென்றடைவதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்களுக்குக கிடைத்து வரும் பயன் குறித்து சர்வதேச பொருளாதார உரிமைகள் அமைப்பான ஆக்ஸ்போம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பொருளாதார ஊக்கத்திற்கான நடவடிக்கைகள், அதனால் மக்களின் வருவாய் மற்றும் சொத்து அதிகரித்துள்ளது குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

''கடந்த 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான சொத்து மதிப்பில் 82 சதவீதம் அளவு வெறும் ஒரு சதவீதம் பேரிடம் உள்ளது. அதேசமயம் உலகம் முழுவதும் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், அதாவது 370 கோடி பேர் கடுமையான வறுமையில் வாடி வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த ஆண்டின் கணக்கீடு அடிப்படையில் மொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத மக்கள் கையில் உள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு என்பது 20.9 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, மத்திய அரசின் 2017-18 பட்ஜெட்டிற்கு நிகரான தொகையாகும். முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 2017-ம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இதே நிறுவனம் 2016-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், மொத்த சொத்துகளில் 58 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் இருப்பதாக தெரிய வந்தது. கிராமப்புற கூலித் தொழிலாளியின் சம்பளம், ஒரு நிறுவனத்தின் உயரதிகாரி தற்போது வாங்கும் சம்பளத்திற்கு நிகராக உயர்வதற்கு, இன்னும் 941 ஆண்டுகள் ஆகும்.

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார திட்டங்களால் ஏற்கெனவே சொத்து வைத்துள்ளவர்கள் புதிய தொழில்களை தொடங்கி அதில் அதிக வருவாய் ஈட்டும் சூழல் உருவாகியுள்ளது. எனவே தான் பரம்பரையாக சொத்து வைத்துள்ள பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்புக 2017-ல் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதேசமயம் ஏழைகளின் எண்ணிக்கையும் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதற்கு வருவாய் சமநிலை இல்லாததே முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. எனவே கிராமப்புறம் சார்ந்த வேலைவாய்ப்புகள், சமூக நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் இந்தியாவில் உள்ளது. வரி ஏய்ப்பை தவிர்க்கும் வகையில் வரி முறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்'' என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x