Published : 31 Dec 2017 09:25 AM
Last Updated : 31 Dec 2017 09:25 AM
ஒரு பரிசுப் பெட்டியை எவ்வளவு காலம் திறந்து பார்க்காமல் இருக்க முடியும்? கனடாவைச் சேர்ந்த அட்ரியன் பியர்ஸ், 47 ஆண்டுகளாக ஒரு பரிசுப் பெட்டியைத் திறக்காமல் வைத்திருக்கிறார்! 1970-ம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 17 வயது அட்ரியனுக்கு காதலி விக்கி முதல்முறையாக ஒரு பரிசைக் கொடுத்தார். அத்துடன் உறவு முறிந்துவிட்டதாகவும் அறிவித்தார். மனம் உடைந்துபோன அட்ரியன், கோபத்தில் பரிசுப் பெட்டியைத் தூக்கி வீசினார். அது கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் போய் விழுந்தது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் முடிந்தவுடன் எல்லாப் பரிசுகளையும் வீட்டில் உள்ளவர்கள் பிரித்துப் பார்த்தார்கள். கடைசியில் இந்தப் பரிசைப் பிரிக்க முயன்றபோது, அதைப் பிரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
“என் முதல் காதல் முறிந்தபோது கொடுத்த இந்தப் பரிசைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கோபமாக இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு என் குடும்பத்தினர் பிரித்துப் பார்க்கச் சொன்னார்கள். என் வாழ்நாள் முழுவதும் பிரிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டேன். பிறகு, விக்கியின் தங்கை என்னைத் தொடர்புகொண்டார். விக்கி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார். இருவரும் சந்தித்தோம். ஆனால் இருவருக்குமே மீண்டும் காதலிக்கும் எண்ணம் தோன்றவில்லை. இனி சந்திக்க வேண்டாம் என்று பிரிந்து சென்றோம்.
எனக்கும் திருமணமானது, குழந்தைகள் பிறந்தனர். ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் இதைப் பிரிக்கலாமா என்று மனைவியும் குழந்தைகளும் கேட்பார்கள். நான் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன். நான் பரிசைப் பிரிக்காததற்கு முக்கிய காரணம், என்றாவது ஒருநாள் விக்கி வருவார், அப்போது இருவரும் சேர்ந்து பிரிக்கலாம் என்ற எண்ணம்தான். அதோடு பிரித்துவிட்டால், அதில் உள்ள சுவாரசியம் போய்விடும். இந்தக் கிறிஸ்துமஸின்போது விக்கியைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் 50-வது ஆண்டில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன். இந்தப் பரிசுப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதைச் சரியாகச் சொல்பவர்களுக்குப் பரிசு கொடுக்கப் போகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை அறக்கட்டளைக்கு வழங்க இருக்கிறேன்” என்கிறார் அட்ரியன் பியர்ஸ். இந்த விஷயம் சமூகவலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
நிகழ்ச்சிக்கு விக்கியும் வரும் வாய்ப்பு இருக்கு!
இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் பகுதியில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்களிடமிருந்து 53 ஸ்மார்ட்போன்களைத் திருடிவிட்டார் 22 வயது ஆலின் மாரின். பெண்களுக்கான நீச்சல் உடைகளை அணிந்துகொண்டு, கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று, இந்தத் திருட்டை எளிதாகச் செய்து முடித்திருக்கிறார் இவர். தண்ணீர்ப் புகாத கவருக்குள் போன்களை வைத்து, நீச்சல் உடையில் மறைத்து எடுத்துவந்து, கார் நிறுத்தும் இடத்தில் வைத்துவிட்டார். இப்படி ஒரு முறை திருடிக்கொண்டு வரும்போது, ஒரு போன் ஆடைக்குள் இருந்து வெளியே விழுந்துவிட்டது. அதை பார்த்து காவலர்கள் விசாரித்தபோது திருடியது தெரியவந்தது.
அடப்பாவி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT