Published : 29 Dec 2017 10:41 AM
Last Updated : 29 Dec 2017 10:41 AM

உலக மசாலா: வந்துவிட்டது மைக்ரோ மொபைல்போன்!

ன்று பலரும் பெரிய திரையுடைய ஸ்மார்ட்போன்களை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் ஜான்கோ நிறுவனம் மைக்ரோ மொபைல்போன்களை உருவாக்கியிருக்கிறது! இந்த போன் கட்டை விரல் அளவிலும் ஓர் உலோக நாணயத்தின் எடையிலும் இருக்கிறது. Zanco tiny t1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போன், உலகின் மிகச் சிறிய மொபைல்போன் என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 300 எண்களைச் சேமிக்கலாம். போன்புக் போல பயன்படுத்தலாம். பரிசளிப்பதற்கும் ஏற்ற பொருள் என்கிறார்கள். இந்த போனில் பேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம், பெறலாம். “நாங்கள் நீண்டகாலமாக மைக்ரோ மொபைல்போன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பலரும் இதை உருவாக்க இயலாது என்றார்கள். t1 போனில் பாதியளவே உருவாக்க எண்ணினோம். ஆனால் நடைமுறையில் இதுதான் சாத்தியமானது. இதிலும் கீபோர்டு, டிஸ்ப்ளே, பேட்டரி போன்றவை இருக்கின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும். 180 நிமிடம் பேச முடியும். இதை உருவாக்கியதில் பெருமைகொள்கிறோம். முதல்முறை இந்த போனைப் பார்த்தால் நம்ப முடியாது. இரண்டாவது முறை எடுத்துப் பார்ப்பீர்கள். மூன்றாவது முறை வாங்கிவிடுவீர்கள். எந்த மொபைல் நெட் ஒர்க்கிலும் இது வேலை செய்யும். நானோ சிம் பயன்படுத்த வேண்டும். இது 2ஜியில் மட்டுமே வேலை செய்யும். அதனால் உங்கள் நாட்டில் 2ஜி இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். ஆஸ்திரேலியா, ஜப்பானில் 2ஜி சேவை கிடையாது” என்கிறார் ஜான்கோ நிறுவனர்களில் ஒருவரான ஷாஜாட் டாலிப்.

வந்துவிட்டது மைக்ரோ மொபைல்போன்!

மெரிக்காவைச் சேர்ந்த 74 வயது ஆலன் ராபின்சனும் 72 வயது வால்டர் மெக்ஃபார்லேனும் நீண்டகால நெருங்கிய நண்பர்கள். தற்போது இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று தெரியவந்திருக்கிறது! “நானும் மெக்ஃபார்லேனும் 60 ஆண்டுகால நண்பர்கள். ஒரே பள்ளியில் படித்தோம். பிறகு இதே பகுதியில் வேலை செய்து, திருமணமும் செய்துகொண்டோம். எங்கள் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படித்தார்கள். எங்கள் பேரக் குழந்தைகளும் அதே பள்ளியில் படித்தார்கள். அதனால் எங்கள் நட்பு நீண்ட காலமாக நிலைத்து நின்றுவிட்டது. நாங்கள் இருவரும் எங்களது பெற்றோர் பற்றிய தகவல்களைத் தேட முடிவு செய்தோம். நான் பிறந்தவுடன் என் அம்மா என்னைத் தத்து கொடுக்க முடிவு செய்தார். ஆனால் என் அம்மாவின் பெற்றோர் என்னைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். பிறகு அம்மா இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தையைப் பெற்றார். அந்தக் குழந்தையையும் தத்து கொடுத்துவிட்டார். அம்மாவுடன் எங்களுக்கு தொடர்பு இல்லாமல் போனது. மெக்ஃபார்லேனும் வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்பட்டவன். அதனால் அவனும் அவனது பெற்றோர் குறித்து தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருந்தான். நாங்கள் இருவரும் டிஎன்ஏ பரிசோதனை செய்துகொண்டோம். அதில் நாங்கள் இருவரும் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள் என்பது தெரியவந்தது. எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்! நட்பு இப்போது உறவாகவும் மாறிவிட்டது” என்கிறார் ஆலன் ராபின்சன்.

நண்பர்கள் சகோதரர்களான கதை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x