Published : 17 Dec 2017 11:40 AM
Last Updated : 17 Dec 2017 11:40 AM
வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க ஜப்பானின் பாதுகாப்பு பட்ஜெட் நிதியை ரூ.2.9 லட்சம் கோடியாக அதிகரிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனையின்போது வடகொரியாவின் 2 ஏவுகணைகள் ஜப்பானின் வான்பரப்பை கடந்துச் சென்றது அந்த நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பின்னணியில் ஜப்பானின் 2018-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ரூ.2,94,770 கோடி நிதி ஒதுக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக ஜப்பானின் பாதுகாப்பு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன்மூலம் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் சாதனங்களை அதிக அளவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 900 கி.மீ. தொலைவு பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்கவும் ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வடகொரியா மட்டுமன்றி ஜப்பானின் பாதுகாப்புக்கு சீனாவும் அச்சுறுத்தலாக உள்ளது. இதையும் கருத்திற் கொண்டே பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டதாக அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் பிதமர் ஷின்சோ அபே நிருபர்களிடம் கூறியபோது, “உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முறியடிக்க சர்வதேச நாடுகள் ஓரணியில் திரள வேண்டும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT